Friday, 13 April 2012

வெள்ளை வண்டி


அன்று இரவு விடியலுக்காக
எங்கள் கிராமம் அமைதியாகக்
காத்துக்கொண்டிருந்தது .

மின்னல் வேகத்தில்
வெள்ளை வண்டி ஒன்று
கிராமத்திற்குள் வந்து நின்றது .

கண்ணிமைக்கும் நேரந்தான்
வண்டிக்குள்ளிருந்து பாய்ந்தார்கள்
எங்கள் குடிசைக்குள் துப்பாக்கிகளோடு !

 "அய்யோ,அம்மா ,அப்பா !"
 என்ற அபயக் குரலோடு
மூச்சு வாங்க வீட்டுக்குள்ளிருந்து
ஓடி வந்தார்கள் எங்கள் பாட்டாளி மக்கள் !

 இந்த ஓலங்கள் ஊரையே உலுக்கிவிட்டன
 அக்கம் பக்கத்தில் உள்ள
அக்கா  தங்கச்சிகளும் தாய்மார்களும்

உயிரைப் பிடித்துக் கொண்டு
உடமைகளை உதறி விட்டு
அரண்டு சுருண்டு ஓடினார்கள் ...
அண்டை ஊருக்குள் அடைக்கலமாக .

அது மட்டுமா
படுக்கையில் பால்குடித்துக் கொண்டிருந்த
பச்சிளங் குழந்தையொன்றை
வாரி அணைத்துக் கொண்டு
ஒரு தாய்
உதிரம் சொட்டச் சொட்ட ஓடி ஒளிந்தாள்.

அன்றுதான்
அந்தக் குழந்தை இந்தப் புண்ணிய பூமியில் பிறந்து
இரண்டாவது வாரத்தை எட்டிப் பிடிக்கிறது .

 தூங்கிக் கிடந்த எங்கள் சின்னஞ்  சிறுசுகளோ
திக்குத் தெரியாமல் பறந்து போயின
 பல்வேறு திசைகளில் ...

அன்று இரவு 
 விடியலுக்காக எங்கள் கிராமம் 
அமைதியாகக் காத்துக்கொண்டிருந்தது . 

ஆம் 
எங்கள் உழைப்பின் சிங்கங்கள்
 சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த
 காசு பணங்கள் கொள்ளை போயின ! 

எங்கள் உயிருக்கும் உழைப்புக்கும்
 உற்ற நண்பனாய் இருந்துவரும்
 ஆடுகளையும் மாடுகளையும் 
முதுகில் குத்தினார்கள்
 புத்தியுள்ள மனிதர்கள்
 துப்பாக்கி முனையிலுள்ள கத்தியினால்!

 பாவம்
 அவை வாய் விட்டு 
அழ முடியாமல் கண்ணீர் சிந்தின !  

 பாருக்குள்ளே நல்லநாடு எங்கள்
 பாரதநாடு -என்றல்லவா
 பாடி விட்டுச்  சென்றான் அந்தப் பாரதி !

இன்று 
இந்தப் பாடல் வரிகளை 
நினைக்கும் பொது எங்களுக்கு ஐயம் வருகிறது.
இது எங்கள் நாடுதானா?

 ஆதிக்கம் செலுத்தும் அதிகார வர்க்கங்களே!
 நாங்களும் உங்களைப் போல் மனிதர்கள்தானே !
இன்னும் ஏன் எங்களை அடிமையாகவே
 நினைக்கிறீர்கள் ?

 வெள்ளை வண்டியில் வந்து
 ஊரைச் சிவப்பாக்குகிறீர்கள் ? 

சாதி ஒழிப்போம் என்று    
மூச்சுக்கு முந்நூறு முறை
 பிரசங்கம் செய்கிறீர்கள் 
சாதியை ஒழிப்பது இப்படிக் கொன்றுதானா?

நம்நாடு ஒரு சுதந்திர நாடல்லவா ?
 பின்னர் ஏன் நமக்குள் ஏற்றத் தாழ்வுகள் !

 நாங்கள்
 உங்கள் சொத்துக்களையா கேட்கிறோம் ?
 எங்கள் உரிமைகளைத்தானே கேட்கிறோம் !

இதைக் கேட்டால் நாங்கள் 
வன்முறையாளர்கள் ,தீவிரவாதிகள்
 பயங்கரவாதிகள் என்ற பட்டமா ?

 மனிதர்களே ! கொஞ்சம் சிந்தியுங்கள்!
 நாங்களோ அமைதியை விரும்பும் ஆழ்கடல் !

அடக்கு முறைகளுக்கு அடிபணிய மாட்டோம் !
அன்பு காட்டுபவர்களை  அரவணைப்போம் !
அமைதி குலைப்போரைப் புறக்கணிப்போம்  !

சமத்துவம் சகோதரத்துவம் எங்கள் உயிர் மூச்சு !
எங்களை மிதித்தால்  விபரீதங்களாகும்!
 மீறினால், விபத்துகளாகும்! 

மலைகளோடு மோதவேண்டாம் !
 மோதினால் நீங்கள் முகமிழந்து போவீ ர்கள் ! 

 நாங்கள் புழுக்கள் அல்ல நசுக்கி விடுவதற்கு !
பொறுமையாகப் பாயும் புலிகள் !

பாய்ந்தால், யாரை அடிக்குமென்று
 எங்களுக்கே தெரியாது !

சாது மிரண்டால் காடு கொள்ளாது !
குண்டாந்தடி வெல்லாது ! குண்டுகளும் வெல்லாது !

 நாங்கள் தீ  
நல்லவர்களுக்குத் தீபங்களாவோம்! 
அல்லாதவர்க்குத்  தீ மூட்டுவோம் !  

o   

1 comment:

  1. இயல்பாகவே உங்கள் உணர்வு மிகவும் உன்னத தன்மையில் உள்ளது . பெரும்பாலும் கவிதை என்ற ஒன்று மனதின் உணர்வுகளை வெளிபடுத்தும் கருவி அவ்வகையில் உங்கள் உணர்வு மிகவும் உன்னதமானது வாழ்த்துகள்

    ReplyDelete

Facebook Google Digg Pinterest