Friday, 30 September 2011

வீதியெங்கும் பைத்தியங்கள்




எதை மறந்தாலும் இதை மறப்பதில்லை      
எதைத்  தொலைத்தாலும்  இதை தொலைப்பதில்லை      
அப்படியே தொலைத்தாலும்   ...  
அடுத்தநாளே என் கையில் அலங்கரிக்கும் !   

அவ்வப்போது புதியதாய் பார்க்கும்போது -எனக்கு                    
புதுப்பெண்  அனுபவம்தான் !

நடக்கும்  போதும்  படுக்கும்  போதும்            
பாத்ரூம்    செல்லும் போதும்-  ஒரு       
புலனாய்வுத்  துறையினரைப்  போல்  என்னோடு  வரும்  . 

அழைப்பது  ஆணாக இருந்தால்             
 ' ஹகூவை'- போல்  என் பேச்சிருக்கும்...      

அழைப்பது பெண்ணாக இருந்தால்     
மரபுக்  கவிதையாய்  நீட்சியடையும் ...

பொய் சொல்லத்  தெரியாமல்  இருந்தேன்    
இது வந்ததிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு பொய் ....

இது கையில்  இருந்தாலும் பையில் இருந்தாலும்             
கழுத்தில்  தொங்கினாலும் இடுப்பில் இருந்தாலும்    
இதனால் வரும்' அகால மரணத்தை' யாரால் தடுக்கமுடியும்?  

 வீட்டுக்குள்  இருந்த பைத்தியங்கள் போய்.. .    
இப்போது  _
வீதியெங்கும்   பைத்தியங்கள்!    

மருத்துவ ஆராச்சியில்      --
காது செவிடாகும் ,  புற்று நோய் வரும் ,     
நுரைஈரல் பலவினமாகும் ஆயுள் குறையும் ...      
என்றார்கள் ... அது எந்தநோயோ   ..    

எதோ ஒரு   நோய்க்கு ...  
நானும் தயாராகிவிட்டேன் ...! 

o


Thursday, 29 September 2011

அதிசய மரம்


ஆற்றங்கரையிலும்
வாய்க்கால் வரப்பின் ஓரத்திலும்

வானுயர நின்றபடி  
விவசாயின் நிலங்களைக்

காலம் காலமாய்க்  
காவல் காத்து வரும்  
காவல்காரன் நான்!  

வெய்யில் காய்ந்தாலும்     
மழை பொழிந்தாலும்    
புயல் அடித்தாலும்   
ஒற்றைக்காலோடு       
தவமிருப்பவன் நான்!

என் அடையாளாச் சின்னம்  
கறுப்புதான்!   
ஏனென்றால் என்னோடு இருக்கும்       
விவசாயின் நிறமும் அதுதானே!
நான் இல்லாத கிராமங்கள் இல்லை     
கிராமங்கள் இல்லாமல் நானுமில்லை!
என்னைக் குழந்தைகள் முதல்    
பெரியவர்கள் வரை
விரும்பாதவர்கள் யாருமில்லை!

கார்த்திகை மாதமும்   
சித்திரை மாதமும் வந்து விட்டால்  
என் கிராமத்துக் குழந்தைகளுக்குக்      
கொண்டாட்டம் தான் !

என்னால் அழிந்தவர்கள் யாருமில்லை
என்னை அழிப்பவர்கள் தான் ஏராளம் !

நான்  'கறுப்புத் தங்கம்' !  எப்படி?
காய்ந்தால் சருகு  
நனைந்தால் குடை  
போதைக்குக் கள்ளு
கோடைக்கு நுங்கு
தாகத்திற்குப் பதநீர்  
ஏழைக்கு விசிறி
அடுப்புக்கு விறகு  
வீடுகட்ட கயிறு 
வெய்யிலுக்கு நிழல்
வெட்டிய  பின்  வீட்டிற்கு  வாரை
விளையாட்டுக்குப்  பொம்மை  
இன்னும்    வெவ்வேறு  வடிவில் 
அவ்வப்போது  பயன்படுவேன் !
என்னில்  எதுதான்   
எம் மக்களுக்குப்  பயனில்லை!
நான்தான் மரம்   
இல்லை   
அதிசய மரம்! 
'பனைமரம்'  நான்தான்! 
அடுத்துவரும் தலைமுறைக்கு      
அடையாளச் சின்னமும்   
நான்தான்...  நான்தான் ...!   

O

இழப்பு


கரைந்து போன வாழ்க்கையைக்   
கண்ணீரால் நிரப்பிக் கொண்டிருந்தார்.  

இருபத்தி ஐந்து   ஆண்டுகளாய்  
அப்பாவின் நரம்புகள் விறகாய் எரிந்தன !

சருகு கிடைத்தாலும்   
குருவிபோல் கொண்டு சேர்ப்பார்.

நடந்து நடந்தே பாதங்கள்   
பாதியாய்க் குறைந்தன.

நட்பின் பெயரில்  
கொஞ்சம் கொஞ்சமாய்க்  
கொள்ளை போயின வாழ்க்கை.

எங்கே கைப்பந்தாட்டத்திற்குப்  
பயன்   படுத்தினால்  உயரப் போய்  விடுவாரோ   
என்றெண்ணிக் கால் பந்தாட்டதிற்கே   
பயன்படுத்திக் கொண்டார் நண்பர்.
உண்மையான நட்பு  
இருவரையும் உயர்த்திப் பார்த்து மகிழும் .
ஆனால் இங்கு உயர்ந்து போனது  
அப்பாவின் நண்பர் மட்டுமே.

நண்பருக்கு நாளெல்லாம் உழைப்பதே
இறைவனுக்குச் செய்வதாய் மகிழ்ந்து போவார்.

அதனால்தான் அப்பாவின்
வியர்வையில் விளைந்த விளைச்சலை எல்லாம்
நண்பரே அறுவடை செய்துகொண்டார்.

அப்பா கண்ட பலன்  
பாராட்டுப் பத்திரமும், சிறு சிறு அன்பளிப்பும்!
அவைகள் அவ்வப்போது கிடைத்த
பரிசுகள் அல்ல !
அவரை அடிமையாக வைத்துக் கொள்ளக்  
கொடுத்த மயக்க மாத்திரைகள் !

இப்படித்தான் எத்தனையோ
ஏழைகளின் வாழ்க்கை  
திருடப்பட்டுக்  காணமல்  போய்விட்டது !
ஏற்றிவிட்ட ஏணியை  
எட்டி  உதைப்பது   இயல்புதானே ! 

நடை பாதை என்றைக்காவது 
தானே நடந்த துண்டா? 
சவாரி அடிக்கப்பட்ட குதிரை
என்றைக்காவது விலைபோன துண்டா?

அப்படி தான் அப்பாவின் கூடு  
வெறுங்கூடாய்ப் போனது ?

எப்படியோ அப்பா             
உனக்கு உன் நண்பர்   
தெய்வமாகிப் போனாலும்     
எப்பொழுதும் போல    
எனக்கு  நீ   நல்ல  மனிதராகவே  இருப்பா. ! 

O








Wednesday, 28 September 2011

அம்மா


அம்மா !
நான் பள்ளியிலிருந்து  வீடு திரும்புகையில்   
முடிச்சி வைத்திருந்த  
முந்தனையை அவிழ்ப்பாய்.
என்னவென்று கேட்ப்பேன்.
யாரோ ஒருத்தர் கொடுத்தாங்க  
காலையில என்பாய்.
மகிழ்ச்சியோடு தின்பேன்
அந்தத்   தின்பண்டத்தை!

உன்னை உற்றுப் பார்க்கையில்  
சேறும் சகதியோடு  உன் மேனியெல்லாம்    
காய்ந்த சருகைப்போல் வாசம் வீசும் .

சூரியன் உன்னைச் சுட்டேரித்தே   
உன் முதுகெல்லாம் பளபளக்கும்  
மீன் செதில்களைப்போல் .

உலைக்கையும், களைக்கட்டையும் 
பிடித்துப் பிடித்தே கைகள் இரண்டும்  
உருக்குலைந்து போயிருக்கும்.

ஏரியெல்லாம்  சுற்றித் திரிந்து  
கூடை கூடையாய்ச்
சாணத்தைக்  கொண்டுவந்து  
நிலத்திற்கு  உரமாக்குவாய் .

நெல்பயிரும் நன்றாய் வளரும் .
கூடவே  களையும்,  பூச்சிகளும்   
திருப்பதிபோல் திட்டுதிட்டாய் மொட்டையடிக்கும் !

ஓரிருமுறை தண்ணீர் பாச்சிவிட்டு  
மூன்றில் ஒருபங்கைக் கணக்காய்ப்  
பதரைக்கூட விடாமல்  
பிரித்துக் கொள்வான் பண்ணையார் !

மீதமுள்ள நெல்மூட்டையை  
வாங்கிய கடனுக்கு வட்டியாகக்  கொடுத்துவிட்டு   
இரவு பகல் பாராமல்   
கூழைக் குடித்தே உயிர் வளர்த்தாய் .

அம்மா !
நீ யார் வீட்டிலும்  
பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கமாட்டாய் .
ஏனென்று  கேட்டால் ...
அங்கெல்லாம் சுத்தமிருக்காது என்பாய்  .  

வெற்றிலையும் பாக்கும்  
இருந்துவிட்டால் போதும்  
வயிறு  நிரம்பும் என்பாய் !

அதோடு இல்லாமல்  ...
வீட்டைச்சுற்றிச் சிவப்புச்சாயம்
 அடித்து வைப்பாய்!
 கட்டியிருக்கும் புடவை கந்தலான பிறகும்  
கட்டிக்கிழிப்பாய் .
கிழிந்தபின், கரித்துணியாய்  வந்து  நிற்கும்  !        

அம்மா!
நீ சேர்த்து வைத்து விட்டுப்போன  
ஆள் உயரம் அடுக்கி வைக்கப்பட்ட
 மண்சட்டிப் பானைகள்  
வீட்டிற்குள் படை வீரர்களாய்  
வரிசையாய் நிற்கும் !

மலைக்குன்று போல் நெல்குற்றும் உரலும்  
வண்டிச் சக்கரதைப் போல்   
கேழ்வரகு அறைக்கும் கல் எந்திரமும்  
எண்ணெய் பிழியும் செக்கைப் போல்

மாவு அறைக்கும் உரலும்  
வீட்டின் ஒதுக்குப்புறம்  
உன் நினைவுச்ச் சின்னங்களாய் !

அதுமட்டுமா ?
வீட்டின் மண்தரையைச்  
சாணத்தால் மெழுகி மெழுகிக்  
கண்ணாடிபோல் வைத்திருப்பாய்  !
மழைக்காலம் வந்துவிட்டால்
கண்ணாடிபோல் உள்ள தரை
சொறி சிரங்காய்ச் சிலிர்த்து நிற்கும் !

அம்மா !
நான் எத்தனை முறை  
அழகு தமிழ் பேசினாலும் ,எழுதினாலும் 
"அம்மா " என்று கூப்பிடும்  
சொல்லிற்கு ஈடாகுமா !

உன் பிரிவு  
இன்றும்,என் கண்களைக்   
குளமாக்கி விட்டுச் செல்கிறதே!

O








கடல் அலைகளாய்...

*கவிஞர் ஜா.வினாயகமூர்த்தி அவர்களின்
*வெள்ளை வண்டி*-- கவிதைத்  தொகுப்பிலிருந்து  சில கவிதைகள் ....

இரவு 9 .07 மணித்துளிகள்
 கைபேசி மெல்லச் சிணுங்கியது ...  

எடுத்துப் பார்த்தேன்    
தகவல் உன்னிடமிருந்து   
தாமதிக்கவா முடியும் ?

மனசுக்குள்  மின்சார ஒளிவெள்ளம்
இரவு  பகலானதைப்  போல்  
கையில்  கிடைத்த  ஒரு புதையலாய்
அந்தச்  செய்தியை  
அந்தரங்கமாய்  வாசித்தேன் .

என்  இதயம்  வெடித்துச்  சிதறியதுபோல்
எரிமலைக் குழம்பாய்
அந்த இரவின் மடியில்  நான்

ஓர்  உயிரைக்  காப்பாற்ற  
மருத்துவர்கள்  நோயாளிகளோடு 
நடத்தும் போராட்டத்தைப் போல் 
என் நினைவுகள் பேரதிர்வால்
இடிந்துபோனது .

 "இறந்து விடுவேன் நான்  
இருபத்து மூன்று நாட்களில்.       
மீண்டும் உன் வாழ்வில் நான்
குறுக்கிட மாட்டேன்  ."

இவைதான் 2008 - ஆம்  ஆண்டை
தகர்த்தெறியப்  பதுக்கி வைக்கப்பட்ட  
ஜெலட்டின்  குச்சிகள் !

திட்டமிட்ட  சதி !

"நினைவுடன் 
2009 -க்கான என் முதல் புத்தாண்டு வாழ்த்துகள் "

குறுஞ்செய்தி முற்றுப் பெற்றது.         
இப்போது              
கடல் அலைகளாய் எனக்குள் நீ !

o


Facebook Google Digg Pinterest