*கவிஞர் ஜா.வினாயகமூர்த்தி அவர்களின்
*வெள்ளை வண்டி*-- கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் ....
கைபேசி மெல்லச் சிணுங்கியது ...
எடுத்துப் பார்த்தேன்
தகவல் உன்னிடமிருந்து
தாமதிக்கவா முடியும் ?
மனசுக்குள் மின்சார ஒளிவெள்ளம்
இரவு பகலானதைப் போல்
கையில் கிடைத்த ஒரு புதையலாய்
அந்தச் செய்தியை
அந்தரங்கமாய் வாசித்தேன் .
என் இதயம் வெடித்துச் சிதறியதுபோல்
எரிமலைக் குழம்பாய்
அந்த இரவின் மடியில் நான்
ஓர் உயிரைக் காப்பாற்ற
மருத்துவர்கள் நோயாளிகளோடு
நடத்தும் போராட்டத்தைப் போல்
என் நினைவுகள் பேரதிர்வால்
இடிந்துபோனது .
"இறந்து விடுவேன் நான்
இருபத்து மூன்று நாட்களில்.
மீண்டும் உன் வாழ்வில் நான்
குறுக்கிட மாட்டேன் ."
இவைதான் 2008 - ஆம் ஆண்டை
தகர்த்தெறியப் பதுக்கி வைக்கப்பட்ட
ஜெலட்டின் குச்சிகள் !
திட்டமிட்ட சதி !
"நினைவுடன்
2009 -க்கான என் முதல் புத்தாண்டு வாழ்த்துகள் "
குறுஞ்செய்தி முற்றுப் பெற்றது.
இப்போது
கடல் அலைகளாய் எனக்குள் நீ !
o




No comments:
Post a Comment