Wednesday, 28 September 2011

அம்மா


அம்மா !
நான் பள்ளியிலிருந்து  வீடு திரும்புகையில்   
முடிச்சி வைத்திருந்த  
முந்தனையை அவிழ்ப்பாய்.
என்னவென்று கேட்ப்பேன்.
யாரோ ஒருத்தர் கொடுத்தாங்க  
காலையில என்பாய்.
மகிழ்ச்சியோடு தின்பேன்
அந்தத்   தின்பண்டத்தை!

உன்னை உற்றுப் பார்க்கையில்  
சேறும் சகதியோடு  உன் மேனியெல்லாம்    
காய்ந்த சருகைப்போல் வாசம் வீசும் .

சூரியன் உன்னைச் சுட்டேரித்தே   
உன் முதுகெல்லாம் பளபளக்கும்  
மீன் செதில்களைப்போல் .

உலைக்கையும், களைக்கட்டையும் 
பிடித்துப் பிடித்தே கைகள் இரண்டும்  
உருக்குலைந்து போயிருக்கும்.

ஏரியெல்லாம்  சுற்றித் திரிந்து  
கூடை கூடையாய்ச்
சாணத்தைக்  கொண்டுவந்து  
நிலத்திற்கு  உரமாக்குவாய் .

நெல்பயிரும் நன்றாய் வளரும் .
கூடவே  களையும்,  பூச்சிகளும்   
திருப்பதிபோல் திட்டுதிட்டாய் மொட்டையடிக்கும் !

ஓரிருமுறை தண்ணீர் பாச்சிவிட்டு  
மூன்றில் ஒருபங்கைக் கணக்காய்ப்  
பதரைக்கூட விடாமல்  
பிரித்துக் கொள்வான் பண்ணையார் !

மீதமுள்ள நெல்மூட்டையை  
வாங்கிய கடனுக்கு வட்டியாகக்  கொடுத்துவிட்டு   
இரவு பகல் பாராமல்   
கூழைக் குடித்தே உயிர் வளர்த்தாய் .

அம்மா !
நீ யார் வீட்டிலும்  
பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கமாட்டாய் .
ஏனென்று  கேட்டால் ...
அங்கெல்லாம் சுத்தமிருக்காது என்பாய்  .  

வெற்றிலையும் பாக்கும்  
இருந்துவிட்டால் போதும்  
வயிறு  நிரம்பும் என்பாய் !

அதோடு இல்லாமல்  ...
வீட்டைச்சுற்றிச் சிவப்புச்சாயம்
 அடித்து வைப்பாய்!
 கட்டியிருக்கும் புடவை கந்தலான பிறகும்  
கட்டிக்கிழிப்பாய் .
கிழிந்தபின், கரித்துணியாய்  வந்து  நிற்கும்  !        

அம்மா!
நீ சேர்த்து வைத்து விட்டுப்போன  
ஆள் உயரம் அடுக்கி வைக்கப்பட்ட
 மண்சட்டிப் பானைகள்  
வீட்டிற்குள் படை வீரர்களாய்  
வரிசையாய் நிற்கும் !

மலைக்குன்று போல் நெல்குற்றும் உரலும்  
வண்டிச் சக்கரதைப் போல்   
கேழ்வரகு அறைக்கும் கல் எந்திரமும்  
எண்ணெய் பிழியும் செக்கைப் போல்

மாவு அறைக்கும் உரலும்  
வீட்டின் ஒதுக்குப்புறம்  
உன் நினைவுச்ச் சின்னங்களாய் !

அதுமட்டுமா ?
வீட்டின் மண்தரையைச்  
சாணத்தால் மெழுகி மெழுகிக்  
கண்ணாடிபோல் வைத்திருப்பாய்  !
மழைக்காலம் வந்துவிட்டால்
கண்ணாடிபோல் உள்ள தரை
சொறி சிரங்காய்ச் சிலிர்த்து நிற்கும் !

அம்மா !
நான் எத்தனை முறை  
அழகு தமிழ் பேசினாலும் ,எழுதினாலும் 
"அம்மா " என்று கூப்பிடும்  
சொல்லிற்கு ஈடாகுமா !

உன் பிரிவு  
இன்றும்,என் கண்களைக்   
குளமாக்கி விட்டுச் செல்கிறதே!

O








No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest