Thursday, 29 September 2011

இழப்பு


கரைந்து போன வாழ்க்கையைக்   
கண்ணீரால் நிரப்பிக் கொண்டிருந்தார்.  

இருபத்தி ஐந்து   ஆண்டுகளாய்  
அப்பாவின் நரம்புகள் விறகாய் எரிந்தன !

சருகு கிடைத்தாலும்   
குருவிபோல் கொண்டு சேர்ப்பார்.

நடந்து நடந்தே பாதங்கள்   
பாதியாய்க் குறைந்தன.

நட்பின் பெயரில்  
கொஞ்சம் கொஞ்சமாய்க்  
கொள்ளை போயின வாழ்க்கை.

எங்கே கைப்பந்தாட்டத்திற்குப்  
பயன்   படுத்தினால்  உயரப் போய்  விடுவாரோ   
என்றெண்ணிக் கால் பந்தாட்டதிற்கே   
பயன்படுத்திக் கொண்டார் நண்பர்.
உண்மையான நட்பு  
இருவரையும் உயர்த்திப் பார்த்து மகிழும் .
ஆனால் இங்கு உயர்ந்து போனது  
அப்பாவின் நண்பர் மட்டுமே.

நண்பருக்கு நாளெல்லாம் உழைப்பதே
இறைவனுக்குச் செய்வதாய் மகிழ்ந்து போவார்.

அதனால்தான் அப்பாவின்
வியர்வையில் விளைந்த விளைச்சலை எல்லாம்
நண்பரே அறுவடை செய்துகொண்டார்.

அப்பா கண்ட பலன்  
பாராட்டுப் பத்திரமும், சிறு சிறு அன்பளிப்பும்!
அவைகள் அவ்வப்போது கிடைத்த
பரிசுகள் அல்ல !
அவரை அடிமையாக வைத்துக் கொள்ளக்  
கொடுத்த மயக்க மாத்திரைகள் !

இப்படித்தான் எத்தனையோ
ஏழைகளின் வாழ்க்கை  
திருடப்பட்டுக்  காணமல்  போய்விட்டது !
ஏற்றிவிட்ட ஏணியை  
எட்டி  உதைப்பது   இயல்புதானே ! 

நடை பாதை என்றைக்காவது 
தானே நடந்த துண்டா? 
சவாரி அடிக்கப்பட்ட குதிரை
என்றைக்காவது விலைபோன துண்டா?

அப்படி தான் அப்பாவின் கூடு  
வெறுங்கூடாய்ப் போனது ?

எப்படியோ அப்பா             
உனக்கு உன் நண்பர்   
தெய்வமாகிப் போனாலும்     
எப்பொழுதும் போல    
எனக்கு  நீ   நல்ல  மனிதராகவே  இருப்பா. ! 

O








No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest