Wednesday, 18 June 2014

ஸ்பெக்ட்ரம் ஒளிக்கற்றைகள்

பூமி உருண்டையானது பூமி சுற்றுகிறது
என் அறிவியல் ஆசிரியர் அன்றுச் சொன்னார்
எனக்கு நேற்றுவரை விளங்காமல் போனது
இன்று உங்களைப் பார்த்தப் பிறகுதான்
அது உண்மையானது ...

பதினெட்டு வயதில் பார்த்த முகங்கள்
பாவாடை தாவணியில் கலக்கிய
எங்கள் தாவணிக் கனவுகள்

ஒவ்வொரு முகங்களும்
 ஸ்பெக்ட்ரம் ஒளிக்கற்றைகள்
அன்றைய குவியாடிகள்
சுரம் மீட்டும் சோனா மீட்டர்கள்

பட்டாம் பூச்சிகள் வண்ணத்துப் பறவைகள்
தொட்டா சிணுங்கிகள் மழை மேகங்கள்
மொத்தத்தில் எங்கள் இதயங்களை
கொள்ளையடித்த திருட்டுச் சிறுக்கிகள்

பல லூசுக்களையும் பல பைத்தியங்களையும்
விழுப்புரம் மண்ணில் விதைத்துவிட்டுச் சென்ற
வானூர்திப் பறவைகள்

அரும்பு மீசைகளையும் பரட்டைத் தலைகளையும்  
கதாநாயகர்களாக்கிய கதாநாயகிகள்
உங்களின் தவணை முறைபேச்சிக்கு
எங்கள் இதயங்கள் அல்லவா காத்துக்கிடந்தது

கல்லூரி வாசல் நோக்கி கண்கள் தவமிருக்கும்
முன்னழகை பார்ப்பதற்கு கால்கள்
முதல் மாடியில் இடம்பிடிக்கும்
பின்னழகை பார்ப்பதற்கு பின்பெஞ்சில்
அமர்ந்திருந்து பாடத்தை கவனிக்கும்

நீங்கள் போகும் போதும் வரும்போதும்
 உங்களோடு பேசுவதற்கே
எங்கள் சைக்கிள்கள் அடிக்கடி பஞ்சராகும்

உங்கள் கரங்களை தொடுவதெர்கே
பேனாக்களையும் பென்சில்களையும்
கடன்வாங்க நினைக்கும்

அவர் அவர்களுக்கு வேண்டியவர்கள்
வரவில்லையென்றால் கல்லூரிக்கு வந்ததே
வேஸ்ட் என நினைக்கத் தோன்றும்

இப்படி எத்தனையோ நினைவுகள்
நாங்கள் எதைச்சொல்ல ...

மின்மினி பூச்சிகளாய் ...மின்னல்களாய் ..
எங்கள் மனசுக்குள் மத்தாப்பாய் ...

அந்த மூன்றாண்டுகள் மூன்று மாதங்களாய் போனது
இந்த முப்பது ஆண்டுகள் முகங்களையே
மாற்றிவிட்டது

அய்யகோ... இந்த காலச்சக்கரத்தில்தான்
எத்தனை மாற்றங்கள் ...
அப்பப்பா பார்க்கும்போதே தெரிகிறதே

 புடலங்காய் சுரைக்காயானது
 நாட்டு கத்திரி குண்டு கத்திரியானது
 தார்ரோடு சிமெண்ட் ரோடானது
20 கிலோ 80 கிலோவானது
1000 வாட்ஸ் பல்பு 0 வாட்ஸ்சானது
அதுமட்டுமா...
கருமேகங்கள் வெண்மேகங்களானது
தலையோ குழந்தைகள் விளையாடும்
சறுக்குப்பாலமானது
முகங்களெல்லாம் சுறுக்குப்பையானது

மாணவன் கணவனானான் மாணைவி மனைவியானாள்
கணவன் தந்தையானான் மனைவி தாயானாள்
தந்தை தாத்தாவானான் தாய் பாட்டியானாள்

இத்தனை பதவி உயர்வுக்குப் பிறகா
நாங்கள் உங்களை சந்திக்க நேர்ந்தது

என்ன கொடுமை காலதேவா
கொஞ்சம் முன்னாலே சந்ததி்த்திருந்தால்
கொஞ்சம் மனசுக்கு இதமாய் இருந்திருக்கும்

பரவாயில்லை...இன்று... நினைத்துப் பார்த்தாலே
 நெஞ்சம் இனிக்கிறது
பேசிப்பார்த்தால் மனசு நனைகிறது
 ஏன் தெரியுமா...?
நேற்று இருந்தவன் இன்று இல்லை
இன்று இருப்பவன் நாளை இல்லை

இந்த பூமி சுழற்சியில் ...
மனித இடர்ப்பாடுகள் ஏராளம்...
இயற்கை அழிவுகள் ஏராளம்...

இவைகளோடு போராடி வெற்றிப்பெற்று
புத்தம் புது மனிதர்களாய்...
உலக அதிசயங்களில் ஒன்றாய்...
உங்களைப் பார்க்கும்போது...
என்னுயிர் மீண்டும் புதுப்பித்துக்கொண்டது

இனிவரும் காலங்களில் நாமும்
நம் தலைமுறையும் உலகத்தையே
இணைக்கின்ற ”இணையத்தளங்களாய்”
இணைந்து நட்பிற்கு ஒரு பாலமாய் உலகிற்கு
உரக்கச் சொல்லுவோம்...

நன்றி

வணக்கம்.


   [புதுவையில் உள்ள ஹோட்டல் அக்காட் -ல் 25.05.2014
அன்று கடந்த 1981-84.விழுப்புரம் அரசுகலைக்
கல்லூரியில் இயற்பியல் துறையில் பயின்ற மாணவ,
மாணவிகள் சந்திப்பில் வாசிக்கப்பட்ட கவிதை.]

                                                                         கவிஞர் ஜா.வினாயகமூர்த்தி

No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest