Thursday, 22 December 2011

காதல் கடிதங்கள் !

முன்னும் பின்னும்
முத்திரை பதிக்காமல்
உள்ளுக்குள் விலாசத்தை
விழுங்கிக் கொண்டு
பத்திரமாகப் போய்ச் சேரும்
தங்கக் கட்டிகள் !

புத்தக அறைக்குள்
புழுங்கிக் கொண்டு
தனிமைச் சுகத்தில்
பிரகாசிக்கும்
வெள்ளிக் கேடையங்கள் !

o

ஏன் மறந்தாள் ?

கல்லூரிக் காதலர்கள்
என்ற புத்தகத்தில்
மட்டும் மறவாமல்
என் பெயரை
அச்சடித்து
அவள் பெயருக்குப்
புகழ் சேர்த்துக் கொண்டவள்
அவள்
கல்யாண காகித்தில்
மட்டும் ஏன்
என் பெயரை
அச்சடிக்க
மறந்து விட்டாள் ?


o


உனக்கென்ன...!


என்னை
நீ பார்க்க வேண்டுமென்று
எனக்கோ
நீ
அவசர அழைப்பு விடுகிறாய்... !
பின்
அதை எண்ணியே
என்
இதயமல்லவா
எண்ணிக்கையை
மறந்து விடுகிறது !

என்னோடு
சிறிது நேரம்
சிரித்துப் பேசி விட்டு
நீ
பறந்து விடுகிறாய்... !
அதன் பிறகு
நானல்லவா
தவம் கிடக்கிறேன் ....
அதில் உள்ள
அர்த்தங்களை
ஆராய !


o


நான் ...நான்... நான்...


நான்
பாலைவனத்தில்
பயணம் செய்து கொண்டு
நந்தவனத்தைப் பற்றி
யோசிக்கிறேன் ....!

நான்
அமாவாசையில்
அமர்ந்து கொண்டு
பவுர்ணமியை
நினைத்துப்
பூஜிக்கிறேன் ...!

நான்
தனிமையில்
நின்று கொண்டு
காதல் கல்லறைக்குப் போகும்
வழியினைப்
படம் பிடித்துக் கொண்டிருக்கிறேன்...!                                 

நான்
முள்ளின் மீது
படுத்துக்கொண்டு
பஞ்சனையிடம்
யாசிக்கிறேன் ...!

நான்
கடலில் மூழ்கி
முத்தெடுத்துக்கொண்டு
கரையேறுவதற்கு
நீந்தக் கற்றுக் கொண்டிருக்கிறேன்...!


        
o

மனசுக்குள்  மகரந்தம் ...

அன்பே !
நீ
உன் சின்ன வயசை விட்டு
விடை பெறுவதற்கு முன்
உன்னை துரத்திப் பிடித்து
என்
மனசுக்குள்
ஊஞ்சல் கட்டி
அதில் ---
உன்னை
உறங்க வைத்திருக்கிறேன் !

நான்
நித்திரையிலிருந்து
நிவாரணம்
பெறுவதற்கு முன்
உன்னை மட்டுமே
என் மனத்திரையில்
காண வேண்டும்
என்றெண்ணி
என் மனசுக்குள்
மாட்டிவைத்திருக்கிறேன்
உன்
நிழற்படத்தில் ஒன்றை !

உனக்குள்
என்
நினைவை
நிலைப்படுத்தத்
பரிசுகள்
பல தரவேண்டுமென்று
பல நாட்கள்
தவமிருந்தேன் !
தவத்தின் பயனாக
என்
அன்பு முத்தங்களே
நீ
விரும்பும் பரிசாக
தேர்ந்தெடுத்தேன் !

நீ
சில நாட்கள்
என்னைப்
பார்க்க மறந்து விடுவதால்
ஏதாவது காரணம் காட்டி
என் மனசுக்குச்
சமாதானம் சொல்லிச்
சாந்தப் படுத்தி விடுவேன் !
ஆனால்--

நீ
பேசாமல் மட்டும்
நாள்களை
நகர்த்தி விட்டால்
என் மனசுக்குச்
சமதானப் படுத்த
உன்
சன்னிதானமே
சரணாலயம்!

ஒருநாள்
நீ
என்னிடமிருந்து
எட்டு அடி தூரம்
விலகியே நின்றிருந்தாய்
அந்த --
சிறு இடைவெளிக்குக்
காரணம் தெரிய
என்
கண்ணீரைத்
தூது விட்டேன் ...
அது சொன்னது...
இன்று
நீ
பூவைத் தொட்டால் கூடப்
பொசுங்கி விடுமென்று !

அன்பே !
நம்
உறவுக்குள்
சிறு
பூகம்பங்கள்
புறப்படலாம்
அது
நம் காதல் உறவை
மட்டும்
காயப் படுத்தாமல் போகட்டும் !

o         

No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest