Friday, 9 December 2011

இன்றைய கல்வி



இன்றைய கல்வியானவள்
காசுக்கு முந்தானை விரிப்பதால் தான்
ஆண்மை இல்லாதவன் அவளை
முதலில் மணந்து கொள்கிறான் !


கலப்புத் திருமணங்களை
என்று இந்த சமுதாயம்
மாலை போட்டு வரவேற்கிறதோ...
அன்று தான் சாதிக் கொடுமைகளைத்
தூண்டும்சக்திகளுக்குச் சமாதி கட்டமுடியும் !




நான் உன்னை நேசிக்கும் முன் ...
தங்க மாளிகையில் தங்கத்தை விற்கத்
தடை செய்து விட்டேன் !

இரவு தூக்கங்களுக்கு முற்றுப் புள்ளி   
வைத்து  முக்காடு போட்டு விட்டேன் !

கண்ணீருக்கு அட்வான்சாக கண்களுக்கோ
கருணை  மனு கொடுத்து விட்டேன் !  
சாட்சியம் இல்லாமல் போகச் சாதி பேய்களுக்கு
சமாதி கட்டி விட்டேன் !

நான் உன்னை நேசிக்கும் முன் ...
சமுதாய சடங்குகளைத் தூக்கிச்
சாக்கடையில் போட்டுவிட்டேன் !

உறவினர்களுக்கோ மறக்காமல்
தேதி குறித்து ஓலையனுப்பி விட்டேன்
விருந்துக்கு மட்டும் வரச்சொல்லி !

பெற்றோர்களுக்கோ அவசரத் தந்தி
அனுப்பிவிட்டேன் ...
நம் இருவரையும் பதிவுத்
திருமண நிலையத்திலிருந்து
பத்திரமாக அழைத்துச் செல்ல !

இவையெல்லாம்---
நான் உன்னை நேசிக்கும் முன் ...
எனக்குள் எடுத்துக்கொண்ட
சத்திய பிரமாணங்கள் !

o  


நிலவே !
நீ
நெடுந் தொலைவில்
இருப்பதால்தான்
உன் அழகும் உன் கற்பும்
காப்பாற்றப் படுகிறது !

நீ
மட்டும்
அருகில் இருந்திருந்தால்
எத்தனைக் கவிஞர்கள்
உன்னைக் கற்பழித்திருப்பார்கள்
தெரியுமா!



அன்பே !
உனது கால்களை
அலங்கரித்துக் கொண்டிருந்த
வெள்ளிக் கொலுசு
வெளுத்துப் போய்விட்டதே !
என்ன காரணம் ?

கோடைக்கால கொடுமை
உன்
பாதங்களைப் பதம் பார்த்துவிட்டதா?!
இன்றே...
உன் பாதச் சுவடுகளின்
பாத அளவை
என் இதயத்தில் பதித்துவிடு!
தைத்துப் போடுகிறேன்
செருப்பாக ...!!




நான்
இப்பொழுதெல்லாம்
தனிமையைத்தான் தேடி
ஓடிக்கொண்டிருக்கிறேன்...
ஏனென்றால்
அப்பொழுதுதான்
கவிதை --என்ற பெண்ணிடம்
சுதந்திரமாகக்
காதல் கொள்ளமுடிகிறது !




பெண்கள்
திருமணத்திற்கு முன்
ஆண்களைக் கண்டு
அஞ்சுகிறார்கள் ?
திருமணத்திற்கு பின்
ஆண்கள்
பெண்களைக் கண்டு
அஞ்சுகிறார்கள்!


 o

உனக்கு
என்மேல் நம்பிக்கை
இல்லையென்றால்
நான்
உனக்கு எழுதிய
அந்தக் கடிதங்களை ....
ரசாயனப் பரிசோதனைக்கு
அனுப்பிவை ....!

பின்னர்
உனக்குத் தெரியவரும்
அதில் ---
ஓர் இதயம்
உருக்குலைந்து  
உருகிப்போனதென்று ! 


o                                                                                                                            


அன்பே !
என்
நினைவில்
பல மொட்டுக்கள்
மலராக
மலர்ந்தாலும்
மணப்பதில்லை !

நீ
என்
இதயத்தில்
இருக்கும் வரை !

o


என்
கவிதைகள்
ஒரு
காலக் கண்ணாடி!
அதில்
அடிக்கடி
என்
முகங்களை
நான்
சரி பார்த்துக் கொள்கிறேன் !




அன்பே !
நீ என் காதலை நிராகரித்து விட்டதால் ....
அன்றே என் இதயத்துக்குள்
உன்னைச் சுமக்க ஆரம்பித்து விட்டேன் !
அங்கிருந்து ---
நீ கோரிக்கை மனு விடும் போதெல்லாம்
என் உணர்வுகள் வினாடிக்குள் உஷ்ணமாகி விடுகின்றன!
இதனால் ---
ஓய்வெடுக்கப்பட்ட என் நரம்புகளுக்கோ
புத்துணர்ச்சி கிடைத்து விடுகிறது !

அன்பே !
நீ என் காதலை நிராகரித்து விட்டதால் ....
உனக்காக ஒரு காதல் காவியத்தையே
உருவாக்கி விட்டேன் !
அதனால்தான் ---
நான் கவிஞன் என்ற தகுதிக்குத்
தள்ளப்பட்டுவிட்டதாகப்
பல இதயங்களுக்குள் வரவேற்பு !
இந்த ---
புகழ்  ஏணியில் அமர்ந்து கொண்டுதான்
தினமும் கவிதை பூக்களால் அலங்கரித்து
உன்னழகை  ரசித்து  கொண்டிருக்கிறேன்....!                       

அன்பே !
நீ என் காதலை நிராகரித்து விட்டதால் ....
உன் எதிர்காலத்தைப் பற்றி
நான் சிந்திக்கத் தவறுவதில்லை ...
இதனால் ---
உன்னை எதிர் கொண்டு வரும்
பிரச்சனைகளுக்குப் பிராசித்தம் காண
உனக்கோ பிரியா விடையளிக்கின்றேன்!

அன்பே !
என்றைக்காவது ஒருநாள் ...
என்மேல் இரக்கப்பட்டால்
என் முகவரிக்கு உன் விலாசத்தை எழுது ...
அதுவரை முகவரியில்லாமல்
உன் எண்ணங்களை என்னிடம் குவியலாக்கு ...!


o   

No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest