Monday, 31 October 2011

கண் சிமிட்டி அழைத்ததேனடி ?




அன்று அவசரமாய்க்
                கடிதமொன்று கொடுத்ததேனடி ?
இன்று பிரிவு நம்மைப் 
                பார்த்துச் சுடுவதேனடி ?

என் பெயரைச் சுருக்கி எழுதி 
               அழைத்து மகிழ்ந்ததேனடி?
என் நெஞ்சில் சுருக்குக் கயிறைப்
               போட்டு மாட்டியதேனடி ?

கதவருகில் நின்று
               கண் சிமிட்டி அழைத்ததேனடி?
காதல் கதைசொல்லிக்
               கையில் விலங்கு போட்டதேனடி ?

உனக்கு என்னடி
               ஒன்றுமில்லை உனக்கடி
எனக்கடி விழுந்ததடி
                உன் சொல்லடி

உன் பார்வை தந்த வெளிச்சம்
               என் கண்ணில் இல்லையடி மிச்சம்
உன் உறவு மாறிப் போனதால்
               என் உயிரும் பிரிந்து போகுமோ ?

பொட்டு வைப்பதும்
               பூச்சூடி விடுவதும்
என்றும் நீயே எனக்கென
               கையில் அடித்துச் சொன்னதேனடி ?

வானும் மண்ணும் போல
               வாழ்வும் வளமும்
உன்னோடென்று உயிரின் மீது
                உறுதியிட்டுச் சொன்னதேனடி ?

என் கண்களுக்குள்
               கண்ணீர் வற்றிப் போனதேனடி ?
நம் காதல் இன்று
               கானல் நீராய் மாறிப் போனதேனடி ?

காரணம் என்னவென்று
               உன்னில் உன்னைக் கேட்டுப் பாரடி ?
என் இதயம் என்றும்
               உனக்கே திறந்து கிடக்குமேயடி

உனக்கு விருப்பமில்லை என்றால்
               என் இறப்பிலாவது கலந்துகொள்ளடி
உன் கையில் நெருப்பை அள்ளி
               என் உடலை எரித்துவிட்டுப் போவாயடி !

o   

Wednesday, 26 October 2011

என்னே தேசப்பற்று !




பிழைக்கப் போனவர்கள்
பிணமாய் வந்தார்கள் !

காலையிலிருந்து மாலைவரை
சூரிய அடுப்பில்
சுருங்கிப் போனவர்கள்
கள்ளச் சாராயத்தால் 
எரிந்து போனார்கள் .

உடம்பு வலிக்காக 
மருந்தாய் குடித்தது 
இவர்களின் உயிரையே குடித்தது .

தூக்கத்திர்காகக் குடித்தவர்கள்
தூங்கிப் போனார்கள்  நிரந்தரமாக .

யார்யாரோ வீட்டு அடுப்புப் புகைய 
இந்த ஏழைகளின் வீட்டின் 
அடுப்பையா அணைக்க வேண்டும் ?

மக்களுக்குக் காவலாய் இருப்பேன் 
என உறுதி எடுத்தவர்கள் 
மக்களைக் காவு கொடுக்கவா 
காச்சுபவர்களுக்குக் காவலாய் இருப்பது ?

கணவன் வருகைக்காக 
பொட்டோடும் பூவோடும் நிற்பவர்கள் 
கையில் பிண மாலையோடு 
அல்லவா நின்றார்கள் !

திண்பண்டத்தை எதிர்பார்த்து
நிற்கும் குழந்தைகள் 
அன்று அப்பாவிற்காக  
தீப்பந்தத்தோடு அல்லவா நின்றார்கள் !

இந்த ஏழைகளின்
கனவுத் தோட்டங்கள்
கல்லறைகளாய் மாறிப் போனதே !

சின்ன எழுத்தில்
இது விஷம் என்று விளம்பரம் .
படிக்காத பாமரனுக்கு எப்படி புரியும் ?

தண்ணீர் விடமாட்டேன் என்றவர்கள்
உயிர் பறிக்க
கேட்காமலே திறந்து விட்டார்கள்
கள்ளச் சாராயத்தை...

என்னே தேசப்பற்று !

o

Wednesday, 19 October 2011

மெளன விசிறி




அன்றாடந்தான்
உன் வீடு நோக்கி வருவேன் 
எப்பொழுதும்  போல் உன் 
அன்புப் பரிமாறல்கள் அமைந்திருக்கும்.

ஆனால் ,பத்துப் பதினைந்து நாள்களாய்
உன் பாசம் ஏனோ பாசாங்கானது 
என்னிடத்தில் என்றும் சலசலக்கும் 
நீரோடைப் போல் கலகலக்கும் உன் பேச்சு
அன்று மட்டும் அரைகுறை வார்த்தைகளாய் ...

நீ  நடத்திய  ஊமை நாடகம் 
உன் சொந்தங்கள் அனைத்தும் 
என்னை விட்டு அறுந்து போனதோ   
என்று எனக்குள் பிரமிப்பானது !               

ஏனென்றால் என் மனச்சுமையை
வேறு யாரிடமும் இறக்கிவைக்க
என் இதயம் சம்மதிப்பதில்லை.

உன் ஆலயத்தை வழிபடாமல்
என் கால்கள் நகர்ந்ததில்லை .

என் உண்மையின் ரகசியம்
எப்போதும் உன்னிடத்தில் மட்டுமே
முதலில் முத்துக் குளிக்கும் .

அன்று மட்டும் ஏன் நமக்குள் முரண்பாடுகள் ?

எனது வருகை உனக்குச் சுமையாக
இருந்தால் சூரியக் கதிர் கொண்டு
சுட்டெரித்து இருக்கலாம் !

நானும் சுகமாகப் பொசுங்கியிருப்பேன்.
அதை  விடுத்து நீ ஏன்
மெளன விசிறி  கொண்டு
எனக்காகக் கையசைக்க வேண்டும்
விருப்பமில்லாமல் ....

o                   

தூறல்



என்
 ஈரமான விழிகளில் -நீயோ
ஓரமாய் ஓய்வெடுத்தாய்
ஓய்வெடுத்த என் நினைவில் -என்னைப்
பாய் விரித்துப் படுக்கவைத்தாய்
படுக்கவைத்த பைங்கிளியே -உன்
சிரிப்பெங்கே தொலைத்து விட்டாய் 
தொலைத்து விட்ட  தொடுவானமே-உன்  
தூறல் பட்டுத் துடித்தெழுந்தேன் 
துடித்தெழுந்து  பார்க்கையிலே -உன் 
மடிமீது தவம் கிடந்தேன் !

தவம் கிடந்த ஞானத்திலே-எனக்குள்
தவழ்ந்து வந்து முத்தமிட்டாய்
முத்தம் பட்ட மோகத்திலே -உனக்குள்
சத்தமின்றி முத்தெடுத்தேன்
முத்தெடுத்துப்  பார்க்கையிலே -என்  
முகச் சாயல் தெரிந்ததடி 
தெரிந்து கொண்ட என் கண்மணியே -நீ  
புரிந்து கொண்ட என்  மனைவியடி!

o         



   

Monday, 17 October 2011

பாட்டன் வெட்டிய கிணறு



வேப்ப மரத்தின் நிழலும்
ஏரிக்காற்றின் வாசமும்
அனுபவித்த நான் ....இன்று
கழிவுகளின் துர்நாற்றத்தாலும் ...

துரத்தித் துரத்தி இரத்தம் குடிக்கும்
கொசுக்களின் படையெடுப்பாலும்
என் இரவுகள் அழிக்கப் படுகின்றன !

வசிக்கும் வீட்டில்
திருடன் வந்து போனால்கூட -நாளையச்
செய்தித் தாள்களிலும்  தொலைக் காட்சிகளிலும்
பார்த்துதான் தெரிந்துகொள்வார்கள் ...
பக்கத்துக்கு வீட்டுக்காரர்களும் ...
வீட்டின் உரிமையாளர்களும் !
  
விடியற்காலையில் ...என் தூக்கத்தைக் கலைக்கும்
தெருக்கோடியின் கூரையின்மேல்
கூவி அழைக்கும் சேவலும்
என் வீட்டு முருங்கை மரத்தின்மேல்
காகங்களும் குருவிகளும் சண்டையிட்டுக் கொள்ளும்
சத்தம்கேட்டு படுக்கையில் எழுவேன் ...

இங்கு படுக்கும்போதும் விழிக்கும்போதும்
ஆம்புலன்ஸ் சத்தமும்... அடுத்தவர்களின் 
செவிப்பறைகளை செலவில்லாமல் 
செவிடாக்கும் ஒலிபெருக்கிகளும் ...

விண்ணை அதிரவைக்கும் வெடிச்சத்தமும்
கேட்டுக் கேட்டு விடிவதுதெரியாமல் 
ஒவ்வொரு நாளும் வேலைக்கு 
ஓட்டப் பந்தையமாய் ...!

கிராமத்தில் இருந்தபோது
ஒவ்வொரு பொருள்களுக்கும்
வெவ்வேறு திசைகளில்...
அலைந்து திரிந்ததால் ...
உண்ட உணவு செறிமானமானது.

நகரத்தில் எல்லாமும் வீட்டுக்கருகே கிடைப்பதனால்
உண்ட உணவு செறிமானமாக
மருத்துவரிடம் ஆலோசனை அவ்வப்போது...!

கிராமத்தில் வாழ்க்கையே
ஓட்டமாய் ...இருந்தது.
நகரத்தில் நலமுடன் வாழவே
நடைப் பயிற்சி கட்டாயமானது !

பிள்ளைகளின் படிப்பிற்கும்
நகரத்தின் நாகரீகத்திற்கும்
நக(ர)த்திற்கு குடி வந்தவர்கள்
உறவுகளை தொலைத்து விட்டார்கள் .
உடைமைகளை இழந்து விட்டார்கள் .

எதிர்காலப்  பிள்ளைகளை நம்பி
எத்தனையோ பெற்றோர்கள்
நிராயுதபாணிகளாய் .... 

நினைவுகள் வரும்போது ...
கிராமத்திற்குச் சென்றால்
அப்பா அம்மா விட்டுச் சென்றவைகள்
கண்முன்னே ஒவ்வொன்றாய் ...
கதைச் சொல்ல வந்து நிற்கும்!

கொள்ளைபுரம் சென்றால் ...
சின்னவயதில் அப்பாவுடன்
மோழியைப் பிடித்துக்கொண்டு
மண்கட்டியில் தட்டுத் தடுமாறி
ஏர் ஓட்ட கற்றுக்கொண்ட
காட்சி ஒருபுறம் ....

அப்பா வரப்பில் அண்டைபோடும்போது
அத்தனை கூலியாட்களையும்
அசரவைக்கும் அழகு ஒருபுறம் ...

அப்பா ஏர் ஓட்ட ...
அம்மா, ஏர் போன வழியில்
மல்லாட்டப்பயிறை மடியில்
கட்டிக்கொண்டு விரல் இடுக்கில்
போட்ட அழகு ஒருபுறம் ....

இரவு களத்துமேட்டில் நெல்லுப்பட்டரையில்
அப்பாவுடன் குளிருக்குச் சம்பை
தலைப் பகுதியில் கவுத்தும் ,
சாக்குப் பையில் காலையும்
நுழைத்துக்கொண்டு திக்குத் ...திக்கென்று
ஏரியின் அருகில் தூங்கியும் தூங்கமலும்
காவலுக்குக் காத்துக் கிடந்தது ஒருபுறம் ...

ஓர் இரவில்  பெய்த பேய்மழையால் ...
பாட்டன் வெட்டிய கிணறு  குட்டையானது .
பங்காளிகளுக்குள் கேள்விக் குறியானது? 

அப்பாவின் அயராத முயற்சியால் 
மறுபடியும் புதிய கிணறானது .

இன்று பங்காளிகளுக்குள் ஒற்றுமையின்மையால்
அப்பா கட்டிய கிணறு 
எனக்குப் பயன்படாமலே போனது !

o
              

Saturday, 8 October 2011

இறப்பும் அழகு !



சொல்லிக்கொண்டு வருவதில்லைக் காதல் 
திருடனாய் வந்து அள்ளிக் கொண்டு 
போவதென்பதே காதல் 

மவுன மொழியில் பேசிக்கொள்ளும் காதல் 
ஊமைப் போல அங்குமிங்கும் 
திருதிருவென்று முழிக்கும் அந்தக் காதல் 

விழிகள் இரண்டும் மோதிக்கொள்ளும் காதல் 
பாவை முகம் பார்த்துப் பார்த்து 
ரசிக்கும் அந்தக் காதல் 

புவியைப் போல் சுற்றிச் சுற்றி  வரும் காதல் 
பாவை முகம் பார்த்துப் பார்த்து 
ரசிக்கும் அந்தக் காதல்

தன்னைச் சுற்றி  நந்தவனமாய் 
மாற்றிக் கொள்ளும் அந்தக் காதல் 
சிரித்து சிரித்துப் பூத்துக் குலுங்கும் 
சிங்காரக் காதல்

ஒரசிப் பார்க்க துடிக்கும் அந்தக் காதல்
ஒரசிவிட்டால் உடலுக்குள்ளே
வெப்பச் சலனம் பாயும் அந்தக் காதல் 

சாதி மத  பேதங்களை சாகடிக்கும் காதல் 
சாதித் தீக்குள் தள்ளிவிட்டால் 
எதிர்த்து நிற்கும் அந்தக் காதல் 

உண்ணும் போதும் உறங்கும் போதும் 
உயிருக்குள்ளே புதைந்து கிடப்பது காதல் 

காதலின் விருந்து இளமையின் அழகு
காதலில் விழுந்தால் உலகமே அழகு

அவள் நடையும் அழகு
அவள் உடையும் அழகு
அவளை முதன்முதலில்
பார்த்ததும் அழகு -- மொத்தத்தில் 
அவள் படைப்பும் அழகு 

காதலில் தோல்வியும் அழகு - அது
சிந்தும் கண்ணீரும் அழகு  
காதலின் நினைவுகள் அழகு - அது 
பேசும் மொழியும் அழகு 

உயிரே அழகு  அவளே அழகு 
பிறப்பும் அழகு  இறப்பும் அழகு 

   

Friday, 7 October 2011

இருட்டுக்குள் என் கிராமம்



என் கிராமத்து மக்கள் ...
இன்னும் இருட்டில் இருந்தே  
யாகம் நடத்துகிறார்கள் .

மூட நம்பிக்கையையே  
முரண்டு பிடிக்கிறார்கள் .
மூச்சு விடுவதற்குக்கூடப்
பழைய  பஞ்சாங்கத்தைப்
புரட்டி முத்தமிடுகிறார்கள் .

அன்றாடம் வயிற்றுப் பசிக்குப்
பண்ணையார் வீட்டில்  
கைகட்டி நிற்கிறார்கள்
கூலி வேலைக்கும்  
ஒரு கைக் கூழுக்கும் !

உப்புக்கும் மிளகாய்க்கும்
ஒவ்வொரு வீடாய்த் தாவும்
ஆத்தாக்கள் ஒருபுறம் ...

அரை வயிற்றையாவது
நிரப்பிக் கொள்ள அடுத்த வீட்டை 
எட்டிப் பார்த்து ஏங்கும்  
குழைந்தை குட்டிகள்  ஒருபுறம்

இவர்களுக்குச்  சொந்தமாக
இருக்கும் நிலமோ "தரிசு"

வானம் பார்த்தால்தான் இவர்களின்
வயிறு தன்னிறைவு  அடையும் 
அதுவரை  வறட்சிதான்.

இதனாலேயே   இவர்களின் "இரைப்பை "
சுருங்கி விடுகிறது  இறப்பதற்குள்.

ஊரின் பெயரோ  "பூத்தவனம்"
ஊரைச் சுற்றிலும் அலங்கரிப்பதோ அலரி, சப்பாத்தி,
வேலி  கத்தான்கள்!

தாகத்திற்காக  எப்போதும்  
வாய்திறந்து   கொண்டிருக்கும்
வயல்வெளி   வெடிப்புகள்.

இங்கோ  ஆர்ட்டீசியன்    ஊற்று
கிடைக்கும் என்று ஆழ்கிணறு  தோண்டினால் 
அகப்படுவதோ  இமையமலைக் குன்றுகள்.

இவர்கள் அணிந்து கொள்ளும்
ஆடைகளோ ஒட்டுப் போட்டவை.
அதுவும் அடிக்கடி
அப்பன் முதல் பிள்ளைவரை
இடமாற்றம் அடையும் !

மழைக் காலங்களிலோ
குழைந்தைகள் கோணிப் பைக்குள் குளிரடுக்கும் !

இங்குள்ள சிறுவர்களின் கல்வியோ
காகித ஓடங்கள்!
ஆடுகளும் மாடுகளுமே
இவர்களின் ஆரூயிர் நண்பர்கள் .

என் கிராமத்து மக்கள் ஒவ்வொருநாளும்
உழைப்பின்  வியர்வையிலேயே
குளித்து விடுவதால்
என் கிராமத்து மண்ணை எங்கு தோண்டினாலும்
உப்புத் தண்ணீரே  ஊற்றுநீராக வரும் !



       

Thursday, 6 October 2011

நட்பு



நட்பு மனிதர்களுக்குக் கிடைத்த மகத்தான ஆயுதம்!  
நட்பு பறவைகளுக்கும் உண்டு ;விலங்குகளுக்கும் உண்டு  .

நட்பின் பயணம் பேருந்திலும் கிடைக்கும் ; பேனாவிலும் கிடைக்கும்  .
தெரிந்தும் கிடைக்கும் ; தெரியாமலும் கிடைக்கும் .

நட்புக்கு முகம் தேவையில்லை; அறிமுகம் இருந்தாலே போதும் .
ஒரு  ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில்  
ஏற்படுகின்ற நட்பே காதலெனும் தேரை கட்டியிழுக்கிறது !

நட்பு ஒன்றே எதற்கும் கட்டுப்படாது  .
நட்பு ஒன்றே எதையும் காயப்படுத்தாது .

நட்புக்கு நிறம் இல்லை; சாதி இல்லை; மதம் இல்லை  .
நட்புக்கு முறிவு இல்லை ; ஆனால் பிரிவு உண்டு .

நட்பு ஒன்றே மனிதர்களை  
அறிமுகப்படுத்தும் அடையாளச் சின்னம் !

நட்பு இல்லையெனில் உறவுகள் இல்லை  .
உறவுகள் இல்லையெனில் உயிர்கள் இல்லை .

நட்பு  சிலருக்கு  வாழ்க்கையைத்  தருகிறது  .
சிலருக்கு வாழக்   கற்றுக் கொடுக்கிறது .

நட்பு ஒற்றுமையை வளர்க்கும்;  உயிரைக் காக்கும் .

நட்பே  உலக நாடுகளை ஒன்றினைக்கும் ... 
செயற்கைக் கோளாகும் !

மனிதர்களே ! நட்பு  செய்யுங்கள்  ....
மனிதப்   பிறவியின்  மகத்துவம் புரியும்  !  

மண்ணின் மடியில் மரம் வளர்ப்போம்...
மழை பொழியும் .....
   
மனித மனங்களில் நட்பை விதைப்போம்  .....
உலகம்  அமைதிபெறும்......!


o     

    






Wednesday, 5 October 2011

மரங்களோடு அல்ல !

தலைப்பாகையோடும்  கோமணத்தோடும்
அவசர அவசரமாய்க் கையில்  
கொடுவாள் ஏந்தி       
எங்கே புறப்படுகிறாய்  மனிதா !  
யாரைப் பழி தீர்க்க இந்தக் கோலம் ?  

உன்  வயிற்றுப் பசிக்கு  உணவளித்து
உன்  உயிரைக்  காப்பாற்ற   
வானத்தை நோக்கித்  தவமிருக்கும்  
அந்த வானுயர்ந்த மரங்களையா    
வெட்டப்  போகிறாய் !

உன் உரிமைத் தாகத்திற்கு -அதன்  
உயிரையா  குடிக்க வேண்டும் ?

தலைமுறை தலைமுறையாய்  
நம்மோடு உறவுகொண்டு வரும்
உயிர்ச் சொந்தங்கள் அல்லவா அவைகள் !

அவற்றை விதவையாக்கினால்  
வான்மேகம் அல்லவா  
தன் கண்களை இறுக்கிச் சாத்திக் கொள்ளும் !

உன் கையில்  ஏன் 
மண்ணைண்ணையோடு  தீப்பெட்டி ?
யாரைத்   தீக்குளிக்கக்    
கட்டாயப்   படுத்தப் போகிறாய் ?

மனிதர்கள்   தீட்ட முடியாத  
அந்தப் பசுமை நிறைந்த ....
வானுயர் வண்ண ஓவியங்களையா....?  

அவைகள்  உனக்கு  
அமுதசுரபியாய்  அவ்வப்போது   
வாரி  வழங்குகின்றனவே!

தவறு  செய்யாத அதனைத்   
தண்டிக்கப் போவது  நியாயமா ?

வெட்டுபவனும்   நீதான்   
வளர்ப்பவனும்   நீதானே!
உன்னைவிட உரிமை   கொண்டாடுவதற்கு  
இந்த மண்ணில் வேறு  எவருக்கு உரிமை உண்டு ?

மனிதா !  நீ  போரிடு 
மரங்களோடு அல்ல !
உன்னை அடக்கி  ஆளும்  மனிதர்களோடு!    

o



             TT

Tuesday, 4 October 2011

நட்புச் சாகக்கூடாது !

ஆறாம் வகுப்பில்தான்
அவனும் நானும் முதல் சந்திப்பு  . 
இடைவேளையில் இணைந்தது கொள்வோம்!

ஐஸ்,கமர்கட்டு ஒருவரைவிட்டு  ஒருவர்  
சாப்பிடுவதில்லை !

மாணவர்களுக்குள் பொறாமை  
எங்களைப் பார்க்கும்போது.

வீட்டில் கோபத்தோடு வந்துவிடுவேன்  
அப்பா மதிய உணவை மறக்காமல் 
கொண்டு வந்து கொடுப்பார் .

இன்றும் சகமாணவர்களைச் சந்திக்க நேர்ந்தால் 
அப்பாவை  நினைவுட்டி நெகிழ்ந்து போவார்கள்

மதியம் சாப்பாடு டப்பாவைத் திறக்கும்போது  
நண்பன் காணாமல் போவான் !

கண்டுபிடித்து இழுத்து வந்து 
உண்டு மகிழ்வோம் .

எவனாவது அடித்துவிட்டால்
எட்டி உதைப்பான்...கோவம் மூக்கின்மேல்!

டியூஷனில் கொடுக்கும் நோட்சை
மறவாமல் நண்பனுக்குக் கொடுத்துப்
படிக்கச் சொல்வேன் !

ஆசை, அவனும் பாசாக வேண்டுமே  !
பத்தாம் வகுப்பிற்குப் பின் பிரிந்து போனோம் !
பல வருடங்கள் கடிதங்கள் மட்டுமே!
நட்பை வளர்த்து வந்தது...

பட்டப் படிப்போடு வேலை கிடைக்காமல் நான் !
பத்தாம் வகுப்பில் தோல்வியோடு போனவன்
பத்துப் பேருக்கு முதலாளியாக அவன் !

என் இருண்ட வாழ்க்கைப் பயணம்
அவனால் வெளிச்சமானது!

நம்பிக்கை எனக்குள் அழுத்தமானது.   
எனக்கும் கடமை உண்டு
என்  நட்புச் சாகக்கூடாது !

O

Saturday, 1 October 2011

கையில் ஒரு சிம்னி விளக்கோடு...!

அமைதியாய் இருந்த
என் குளத்தில் முதன்முதலாய்
கல்லெறிந்தவன்  நீ!  

சூரியனை நோக்கி                      
பூமிசுற்றி வருவதைப் போல்
உன் பார்வைகள்
என் மீதுச்  சுற்றின!

சுதந்திரப் பறவையாய்
இருந்த என்னை   
ஒரு ஆயுள் கைதியாய்
சிறைப்பட்டேன் உன்னிடத்தில் !   

இராணுவ ரகசியமாய்  
நம் காதல் இருக்கட்டும்  என்றாய் ! 

நானும்...   
நம்பிக்கையோடு புதைத்து வைத்திருந்தேன்    
ஒரு புதையலாய்...

தொலைத் தொடர்பு துறைக்கு மட்டுமே    
நம் அந்தரங்கப் பேச்சின்  நேரடிச் சாட்சியம்!  

திரை மறைவில் பேசிக்கொள்வது 
அன்பின் அழுத்தம் 
அதிகமாகவே வெளிப்படும் .      

என் பெற்றோர்களுக்கு
மாப்பிள்ளை பார்க்கும் படலம்
குறைத்துவிட்டதாக நினைத்து
வந்த வரன்களை   எல்லாம்
ஒதுக்கித் தள்ளினேன் !

வாழ்ந்து கொண்டிருப்பது
உன்னுடன்  அல்லவா!

காலங்கள் ...
சொல்லிக்கொள்ளாமல் நகர்ந்தன.
என் வயதும்
எனக்குத் தெரியாமலே கூடின .   

என் ஆசைகளையெல்லாம்
உன்னால் அழித்துக்கொண்டேன்.
இல்லை
மாற்றிக் கொண்டேன்.

ஒரே இடத்தில்
இருவரும் பணிபுரிந்ததால்

நான் பிறரிடம் பேசுவதிலும் சிரிப்பதிலும்
சிக்கனமாய் இருந்தாலும்
என் மேல் அடிக்கடி
ஒழங்கு நடவடிக்கை இருக்கும் !

அனைத்திற்கும் விளக்கமளித்தால்தான்
அடுத்தகணம் என்னிடம் பேசுவாய் !

உனக்கோ பதவி உயர்வு வந்தது .
மகிழ்ச்சி வெள்ளத்தில் நான் ...

ஏன் தெரியுமா ?
என் தேவாலயத்தை
அலங்கரிக்க வரும்
தேவன் அல்லவா நீ !

அழைப்பு விடுத்தேன்...
இனியும் என்னால் பொறுமை காக்க
முடியாதேன்றேன்.

நீயும் வருவதாகச் சொன்னாய்
உறவினர்களோடு...

உனக்குப்  பிடித்ததெல்லாம்
செய்து வைத்து காத்திருந்தேன் ...!

நீயும் வந்தாய்
உன் பெற்றோர்களும் உறவினர்களும்
வந்தார்கள் ... பார்த்தார்கள்...
உணவை ருசித்தார்கள்...!

அன்றுதான் நமக்குள்ளே
இருந்த காதல்
ஊருக்குள் அரங்கேறியது...!

ஆச்சசிரியத்தொடு மகிழ்ச்சி
ஊரில் உள்ள மனிதர்கள்
பெருமூச்சி விட்டார்கள்...

இத்தனை  காலங்கள்
எத்தனை  வரன்களை
தள்ளி  வைத்தாள் பாவிமகள் !

காத்துக்கொண்டிருந்தேன்
கல்யாணத் தேதிக்காக ...
பதில் வந்தது 'நீ கறுப்பு' என்று!

என்  அன்பிற்குரியவனே!
நீ என்ன சொல்கிறாய் என்றேன் ?
நானும் அதைத்தான்
வழி மொழிகிறேன் என்றாய் !  

அதிர்ந்து போனேன்...!
உடைந்து போனேன்...! 

இனி அழுவதற்கு  என்  கண்களில்
ஒரு சொட்டுக் கண்ணீர்கூட இல்லை! 

உன்னிடம் தொலைத்து விட்ட
அந்த வாழ்க்கையை ...
இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன் ...

கையில் ஒரு சிம்னி விளக்கோடு...!
                                     
Facebook Google Digg Pinterest