Thursday, 29 December 2011

என் நந்தவனத்தில் ....

கல்லூரிச் சோலையில்
           காலெடுத்து வைக்கையிலே--உன்
                       கண்பட்டு வீழ்ந்து விட்டேன்
                                  காதல் சிறையினிலே!

காதல் மொழிப்பேசி நான்
           கரம்பிடிக்க வருகையிலே --என்
                      கன்னத்தில் கொடுத்து விட்டாய்
                                கனிமுத்தம்  ஒன்றனையே !
காதல் கவி பாடக்
           கவி நான் வருகையிலே --உன்
                       கைத் தட்டிக் கவிழ்த்து விட்டாய்
                                   கவியரங்க மேடையிலே!

மனசுக்குள் இடம் பிடிக்க நான்
        மாதவம் புரிகையிலே--உன் 
                மணவறைக்குள்  அழைத்து விட்டாய்
                           மனசுக்குப்  பிடித்தவனையே ! 

புகைப்படம் எடுக்க நான்
         புறப்படுகையிலே --உன்
                   புன்னகை மட்டும் அழித்து விட்டாய்
                            புகைப் படத்திற்குள்ளேயே!

நம் காலத்தின் சோதனையில்
         கரைந்து விட்ட நினைவுகளே --என்
                  காதல்  நந்தவனத்தில் பூத்துவிட்டன... 
                             கண்ணீர்ப் பூக்களாகவே ...!
                 

o                                                          

Thursday, 22 December 2011

காதல் கடிதங்கள் !

முன்னும் பின்னும்
முத்திரை பதிக்காமல்
உள்ளுக்குள் விலாசத்தை
விழுங்கிக் கொண்டு
பத்திரமாகப் போய்ச் சேரும்
தங்கக் கட்டிகள் !

புத்தக அறைக்குள்
புழுங்கிக் கொண்டு
தனிமைச் சுகத்தில்
பிரகாசிக்கும்
வெள்ளிக் கேடையங்கள் !

o

ஏன் மறந்தாள் ?

கல்லூரிக் காதலர்கள்
என்ற புத்தகத்தில்
மட்டும் மறவாமல்
என் பெயரை
அச்சடித்து
அவள் பெயருக்குப்
புகழ் சேர்த்துக் கொண்டவள்
அவள்
கல்யாண காகித்தில்
மட்டும் ஏன்
என் பெயரை
அச்சடிக்க
மறந்து விட்டாள் ?


o


உனக்கென்ன...!


என்னை
நீ பார்க்க வேண்டுமென்று
எனக்கோ
நீ
அவசர அழைப்பு விடுகிறாய்... !
பின்
அதை எண்ணியே
என்
இதயமல்லவா
எண்ணிக்கையை
மறந்து விடுகிறது !

என்னோடு
சிறிது நேரம்
சிரித்துப் பேசி விட்டு
நீ
பறந்து விடுகிறாய்... !
அதன் பிறகு
நானல்லவா
தவம் கிடக்கிறேன் ....
அதில் உள்ள
அர்த்தங்களை
ஆராய !


o


நான் ...நான்... நான்...


நான்
பாலைவனத்தில்
பயணம் செய்து கொண்டு
நந்தவனத்தைப் பற்றி
யோசிக்கிறேன் ....!

நான்
அமாவாசையில்
அமர்ந்து கொண்டு
பவுர்ணமியை
நினைத்துப்
பூஜிக்கிறேன் ...!

நான்
தனிமையில்
நின்று கொண்டு
காதல் கல்லறைக்குப் போகும்
வழியினைப்
படம் பிடித்துக் கொண்டிருக்கிறேன்...!                                 

நான்
முள்ளின் மீது
படுத்துக்கொண்டு
பஞ்சனையிடம்
யாசிக்கிறேன் ...!

நான்
கடலில் மூழ்கி
முத்தெடுத்துக்கொண்டு
கரையேறுவதற்கு
நீந்தக் கற்றுக் கொண்டிருக்கிறேன்...!


        
o

மனசுக்குள்  மகரந்தம் ...

அன்பே !
நீ
உன் சின்ன வயசை விட்டு
விடை பெறுவதற்கு முன்
உன்னை துரத்திப் பிடித்து
என்
மனசுக்குள்
ஊஞ்சல் கட்டி
அதில் ---
உன்னை
உறங்க வைத்திருக்கிறேன் !

நான்
நித்திரையிலிருந்து
நிவாரணம்
பெறுவதற்கு முன்
உன்னை மட்டுமே
என் மனத்திரையில்
காண வேண்டும்
என்றெண்ணி
என் மனசுக்குள்
மாட்டிவைத்திருக்கிறேன்
உன்
நிழற்படத்தில் ஒன்றை !

உனக்குள்
என்
நினைவை
நிலைப்படுத்தத்
பரிசுகள்
பல தரவேண்டுமென்று
பல நாட்கள்
தவமிருந்தேன் !
தவத்தின் பயனாக
என்
அன்பு முத்தங்களே
நீ
விரும்பும் பரிசாக
தேர்ந்தெடுத்தேன் !

நீ
சில நாட்கள்
என்னைப்
பார்க்க மறந்து விடுவதால்
ஏதாவது காரணம் காட்டி
என் மனசுக்குச்
சமாதானம் சொல்லிச்
சாந்தப் படுத்தி விடுவேன் !
ஆனால்--

நீ
பேசாமல் மட்டும்
நாள்களை
நகர்த்தி விட்டால்
என் மனசுக்குச்
சமதானப் படுத்த
உன்
சன்னிதானமே
சரணாலயம்!

ஒருநாள்
நீ
என்னிடமிருந்து
எட்டு அடி தூரம்
விலகியே நின்றிருந்தாய்
அந்த --
சிறு இடைவெளிக்குக்
காரணம் தெரிய
என்
கண்ணீரைத்
தூது விட்டேன் ...
அது சொன்னது...
இன்று
நீ
பூவைத் தொட்டால் கூடப்
பொசுங்கி விடுமென்று !

அன்பே !
நம்
உறவுக்குள்
சிறு
பூகம்பங்கள்
புறப்படலாம்
அது
நம் காதல் உறவை
மட்டும்
காயப் படுத்தாமல் போகட்டும் !

o         

நீ உன் இதயத்திலிருந்து



நீ உன் இதயத்திலிருந்து
என்னை இறக்கியதுமே நான்
கவிதையின் கழுத்தில்
 தாலி கட்டி விட்டேன் !

அதனால் தான்
கல்லறை கூட என்னைக்
காண மறுத்திட்டது!

பாவையே !
உன்
எண்ணங்கள் எல்லாம்
என் நலத்தில்தான் என்று
இராவணன் மனைவி
மண்டோதரியாய்ச் சுளுரைத்தாய் !
ஏனோ ----
திடீரென்று
இராவணன் தங்கை
சூர்ப்பனகைபோல்
நம்
சுகமான வாழ்வில்
சூதாடி விட்டாயே !


o


ஒரு
மனிதனுக்குத்
துன்பம்
தொடர்ந்து
வரும்போது
மரணதேவதை
அவனெதிரில்
நிர்வாணமாகக்
காட்சித் தருகிறாள் !

அந்தநேரமே
அவன்
அவள்மீது ஆசை
ஆசை கொண்டுவிட்டால்
மறுகணமே
அவனால்
அவள்
மகுடம்
சூட்டிக் கொள்கிறாள் !


 o

ஒவ்வொரு---
மனித இதயத்திலும்
ஒரு ஆன்மா
குடிகொண்டிருக்கிறது.
அது
சுதந்திரம் பெற்று
வெளிவரும் பொழுதுதான் 
அந்த
மனிதனுடைய
வளர்ச்சிப் பாதைக்கோ ...
அல்லது
அழிவுப் பாதைக்கோ ...
அது
வழி வகுக்கிறது !

o

Thursday, 15 December 2011

உனது ---


 உனது ---
 புன்னகை முத்துகள் 
 எனது  இதய அறைக்குள்
 பதிக்கப் பட்டுப் பார்வைக்கு
 வைக்கப் பட்டுள்ளன!

 உனது---
 பேச்சுகள்
 என் மனத்திரையில்  
 ஆனந்த ராகத்தில் 
 மறுபதிவு செய்யப்பட்டு 
 என்னைப் பரவசப்
 படுத்திக் கொண்டிருக்கின்றன!

 உனது ---
முக தரிசனம்
கிடைக்கும் போது
 நான்
அமாவாசைலிருந்து
விடை பெற்றுக்கொள்கிறேன்!

 உனது ---
 ஸ்பரிச தழும்புகள்
 எனக்குள் புகுந்து 
 உறவைப் புதுப்பித்து  
 விடுகின்றன!

o                                                      

Friday, 9 December 2011

இன்றைய கல்வி



இன்றைய கல்வியானவள்
காசுக்கு முந்தானை விரிப்பதால் தான்
ஆண்மை இல்லாதவன் அவளை
முதலில் மணந்து கொள்கிறான் !


கலப்புத் திருமணங்களை
என்று இந்த சமுதாயம்
மாலை போட்டு வரவேற்கிறதோ...
அன்று தான் சாதிக் கொடுமைகளைத்
தூண்டும்சக்திகளுக்குச் சமாதி கட்டமுடியும் !




நான் உன்னை நேசிக்கும் முன் ...
தங்க மாளிகையில் தங்கத்தை விற்கத்
தடை செய்து விட்டேன் !

இரவு தூக்கங்களுக்கு முற்றுப் புள்ளி   
வைத்து  முக்காடு போட்டு விட்டேன் !

கண்ணீருக்கு அட்வான்சாக கண்களுக்கோ
கருணை  மனு கொடுத்து விட்டேன் !  
சாட்சியம் இல்லாமல் போகச் சாதி பேய்களுக்கு
சமாதி கட்டி விட்டேன் !

நான் உன்னை நேசிக்கும் முன் ...
சமுதாய சடங்குகளைத் தூக்கிச்
சாக்கடையில் போட்டுவிட்டேன் !

உறவினர்களுக்கோ மறக்காமல்
தேதி குறித்து ஓலையனுப்பி விட்டேன்
விருந்துக்கு மட்டும் வரச்சொல்லி !

பெற்றோர்களுக்கோ அவசரத் தந்தி
அனுப்பிவிட்டேன் ...
நம் இருவரையும் பதிவுத்
திருமண நிலையத்திலிருந்து
பத்திரமாக அழைத்துச் செல்ல !

இவையெல்லாம்---
நான் உன்னை நேசிக்கும் முன் ...
எனக்குள் எடுத்துக்கொண்ட
சத்திய பிரமாணங்கள் !

o  


நிலவே !
நீ
நெடுந் தொலைவில்
இருப்பதால்தான்
உன் அழகும் உன் கற்பும்
காப்பாற்றப் படுகிறது !

நீ
மட்டும்
அருகில் இருந்திருந்தால்
எத்தனைக் கவிஞர்கள்
உன்னைக் கற்பழித்திருப்பார்கள்
தெரியுமா!



அன்பே !
உனது கால்களை
அலங்கரித்துக் கொண்டிருந்த
வெள்ளிக் கொலுசு
வெளுத்துப் போய்விட்டதே !
என்ன காரணம் ?

கோடைக்கால கொடுமை
உன்
பாதங்களைப் பதம் பார்த்துவிட்டதா?!
இன்றே...
உன் பாதச் சுவடுகளின்
பாத அளவை
என் இதயத்தில் பதித்துவிடு!
தைத்துப் போடுகிறேன்
செருப்பாக ...!!




நான்
இப்பொழுதெல்லாம்
தனிமையைத்தான் தேடி
ஓடிக்கொண்டிருக்கிறேன்...
ஏனென்றால்
அப்பொழுதுதான்
கவிதை --என்ற பெண்ணிடம்
சுதந்திரமாகக்
காதல் கொள்ளமுடிகிறது !




பெண்கள்
திருமணத்திற்கு முன்
ஆண்களைக் கண்டு
அஞ்சுகிறார்கள் ?
திருமணத்திற்கு பின்
ஆண்கள்
பெண்களைக் கண்டு
அஞ்சுகிறார்கள்!


 o

உனக்கு
என்மேல் நம்பிக்கை
இல்லையென்றால்
நான்
உனக்கு எழுதிய
அந்தக் கடிதங்களை ....
ரசாயனப் பரிசோதனைக்கு
அனுப்பிவை ....!

பின்னர்
உனக்குத் தெரியவரும்
அதில் ---
ஓர் இதயம்
உருக்குலைந்து  
உருகிப்போனதென்று ! 


o                                                                                                                            


அன்பே !
என்
நினைவில்
பல மொட்டுக்கள்
மலராக
மலர்ந்தாலும்
மணப்பதில்லை !

நீ
என்
இதயத்தில்
இருக்கும் வரை !

o


என்
கவிதைகள்
ஒரு
காலக் கண்ணாடி!
அதில்
அடிக்கடி
என்
முகங்களை
நான்
சரி பார்த்துக் கொள்கிறேன் !




அன்பே !
நீ என் காதலை நிராகரித்து விட்டதால் ....
அன்றே என் இதயத்துக்குள்
உன்னைச் சுமக்க ஆரம்பித்து விட்டேன் !
அங்கிருந்து ---
நீ கோரிக்கை மனு விடும் போதெல்லாம்
என் உணர்வுகள் வினாடிக்குள் உஷ்ணமாகி விடுகின்றன!
இதனால் ---
ஓய்வெடுக்கப்பட்ட என் நரம்புகளுக்கோ
புத்துணர்ச்சி கிடைத்து விடுகிறது !

அன்பே !
நீ என் காதலை நிராகரித்து விட்டதால் ....
உனக்காக ஒரு காதல் காவியத்தையே
உருவாக்கி விட்டேன் !
அதனால்தான் ---
நான் கவிஞன் என்ற தகுதிக்குத்
தள்ளப்பட்டுவிட்டதாகப்
பல இதயங்களுக்குள் வரவேற்பு !
இந்த ---
புகழ்  ஏணியில் அமர்ந்து கொண்டுதான்
தினமும் கவிதை பூக்களால் அலங்கரித்து
உன்னழகை  ரசித்து  கொண்டிருக்கிறேன்....!                       

அன்பே !
நீ என் காதலை நிராகரித்து விட்டதால் ....
உன் எதிர்காலத்தைப் பற்றி
நான் சிந்திக்கத் தவறுவதில்லை ...
இதனால் ---
உன்னை எதிர் கொண்டு வரும்
பிரச்சனைகளுக்குப் பிராசித்தம் காண
உனக்கோ பிரியா விடையளிக்கின்றேன்!

அன்பே !
என்றைக்காவது ஒருநாள் ...
என்மேல் இரக்கப்பட்டால்
என் முகவரிக்கு உன் விலாசத்தை எழுது ...
அதுவரை முகவரியில்லாமல்
உன் எண்ணங்களை என்னிடம் குவியலாக்கு ...!


o   

தேர்தல் திருவிழா


இந்த ---
மாபெரும் திருவிழா தேதியில் தான்
 எங்கள்  ஊரில் முழுச் சுதந்திர
 தினமாகக் கொண்டாடப் படுகிறது !

எங்களு டைய  மனிதாபிமான
 உரிமைகள் கூட  அன்று தானே
 அரங்கேற்றமடைகிறது ! 

ஐந்து வருடத் திற்கு  முன்
 எங்கள் ஓட்டுரிமைகளைக் கொள்ளையடித்துக்
' கொள்ளை' கொண்டவரெல்லாம்
 மறுபடியும் எங்கள் முன்
 தங்களைப் புதுப்பித்துக் கொள்ளவரும் 
புண்ணிய நாளல்லவா அது!

அன்று தானே நாங்கள் எல்லோரும் 
அவர்களுக்கு முன் கடவுளாகக் 
காட்சித்தந்து   வாக்குகளை அளித்துவிட்டு 
வாய்பேசாஊமையாகி விடுகிறோம் !

புண்ணாகிப் போன எங்கள் பாதங்களைச்
சுமந்துச் செல்ல 
எத்தனை சொகுசு வண்டிகள் 
அன்று அனுப்பப் படுகிறது
 எங்கள் வீட்டிற்கு முன் ...!

எங்கள் மூதாதையர்கள் கூட 
அன்றுதானே மறுபிறவி எடுத்துவிட்டு 
எங்களுக்குத் தெரியாமலேயே 
மறைந்து விடுகிறார்கள் !

மழைக் காலங்களில்
ஒப்பாரி வைத்து ஒழுகிக் கொண்டிருக்கும்
ஓலைக்குடிசைகளெல்லாம் 
அன்று ஓட்டுகுடிசைகளாகத் தன்னைப் 
புதுப்பித்துக் கொள்ளும் 
புத்தாண்டு   தினமல்லவா அது !

சில்லரைகளை எண்ணிக் கொண்டிருந்த 
எங்கள் கரங்களுக்குள் 
கரன்சி நோட்டுக்களாக வந்து குவியும்
நட்சித்திர  இரவல்லவா அது !

முடமாக்கப்பட்ட எங்களுடைய கோரிக்கை 
மனுக்களெல்லாம் அன்றுதானே 
அவசர சிகிச்சைப் பகுதிக்கு
அழைத்து வரப்பட்டு
நிவாரணம் அளிக்கப்படுகிறது ?


o
                                

Thursday, 8 December 2011

இந்தத் தீர்ப்பு சரிதானா ?

ஜா.வினாயகமூர்த்தி-யின்
*மனசுக்குள் மகரந்தம்* கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்...

இவளைப் பெண்பார்க்க வருகின்ற
வரன்களின் வருகைக்காக ...
இவள் நந்தவனம்
எத்தனை நாளைக்குத்தான்
பூத்துக்கொண்டே இருக்கும் ...
இவள் கூந்தலை அலங்கரிக்க !

 தேய்ந்து போன இவள் நினைவுகள் கூட
அன்று தான் வளர்பிறையாகிறது..!
இவளைப் பார்த்துவிட்டு சென்றவரெல்லாம்
இவள் கண்களை அல்லவா
ரணமாக்கி விட்டுச் சென்றார்கள் !

மறுநாளே இவள் கழுத்தில்
மாலைவிழும் என்று
ஆசையோடு காத்திருக்கையில் ...
அவர்களிடமிருந்து கடுதாசி தான் வந்தது !

மூடப்பட்டிருந்த இவள் கண்ணீரின்
கதவை திறந்து வைக்குமாறு
அந்தக் கடிதம் மீண்டும்
இவளுக்கு ஞாபகப் படுத்தியது !

இவளைப் பார்க்க வந்தவர்கள்
தராசுத் தட்டை அல்லவா
தூக்கிக் கொண்டு வந்தார்கள் !

அவர்களை விசாரித்ததில்
 மார்வாடிக் கடைக்குப் போவதை மறந்து
இவள் வீட்டிற்கு நுழைந்து விட்டார்களாம் !

வந்து சென்ற வரன்கள் ஒவ்வொருவரும்
 இவள் அழகை ஓரக்கண்ணால்
 உரசிப் பார்த்த போது நம்மை யாரவது
 வன்  நிச்சையமாக கடத்திக் கொண்டு
 போய்விடுவான் என்று எண்ணியே
 இவள் நினைவுகள்  ஒவ்வொரு நாளும் ஓட்டம் பிடிக்கும் ..!

பின் வேறொரு வரன் இவளைப்
 பெண் பார்க்க வருவதாக சேதி வரும்போது
 ஓட்டம் பிடித்த இவள்நினைவுகள்
தடுக்கி விழுந்து இவள் மனசுக்குள் நொண்டியடிக்கும் ..!

 இவளைப் பார்க்கவரும்
 அந்தத் திரு நாள்தான் இவள் உழைப்பிற்கு
அளிக்கப்படும் விடுமுறை நாளாகும்!

இவள் அணிந்து கொள்ளும்
 கண்ணாடி வளையலுக்குக் கூட
அன்று தான்அதன் ஆயுசில் ஒருநாள் கூடுகிறது !

  இவளை உரசும் உணர்ச்சிகள்
 எத்தனை நாளைக்குத்தான்
 தீப்பொறியாகவே தெரித்து விழும் ?
               
எங்குச் சென்றாலும்  ஊருக்குள் கிசுகிசுப்புச் செய்தி
 இவள் இன்னும் தாலி ஏறாதவள் என்று !

ஒருவன் தாராள மனசோடு
தங்கத்தைக் குறைத்து
தலையில் வெள்ளிக் கம்பியோடு
இரண்டாம் தாரமாக இவளைக் கட்டிக் கொள்ள
காரோடுவந்தான் !
        
இவள் பெற்றோர்களும் எத்தனை காலம்தான்
இவள் வயதை
குறைத்துக்கொண்டே போவார்கள்?

சுமை குறைந்த தென்று தள்ளி விட்டார்கள் ...
இவளும் கழுத்தை நீட்டினாள்
காரில் வந்தவனுக்கே !

விடியற்காலையில்  வீதியெங்கும்
 பேப்பரில் பரபரப்புச் செய்தி... 
முதலிரவில் புதுப்பெண் தற்கொலை !

மறுநாள்   நீதி மன்றத்தில் வழக்கு ...
இவள் ஒரு மன நோயாளி என்று தீர்ப்பு !


O

Saturday, 5 November 2011

சங்கமம்

அன்பானவளே !
உன்னை வரவேற்கிறேன் ...
என் இரண்டாம் கவிதைத்தொகுப்பின்
அடையாளச் சின்னமே
உன்னை ஆராதிக்கிறேன் !
தூண்டிலில் மாட்டிக்கொண்ட
மீனைப் போல் நீ என் இதையத்தில்
எப்படிச் சிக்கிக் கொண்டாய் ?

இப்போது எல்லாம் உன் நினைவலைகள்
அடிக்கடி வந்து என் தூக்கத்தை 
அமர்க்களம் செய்வதால் 
எத்தனையோ இரவுகள் 
பகலாகவே விடிகிறது !

உன்னுடன் சின்னச் சின்ன சந்திப்புகளும் 
உன் மின்னல் பார்வையும் ...
அவ்வப்போது பூமியில் வந்து போகும் 
நில நடுக்கத்தைப் போல்  என்னை
அசைத்து விட்டுச் செல்கிறது !

அன்பே !
ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்
நீ உன் தோழியோடு வந்தபோது
உன் உதட்டிலிருந்து சப்தம் இல்லாமல்
ஒரு வெள்ளை ரோஜா காற்றில் பறந்தது!

எதிரில் வந்த நான் திரும்பிப் பார்த்தேன்
என் கண்களுக்கு எட்டிய தூரம்
எந்த மனிதரும் இல்லை!

தாமதமாகத் தெரிந்துகொண்டேன்
அந்தப் 'பூ' என்னக்காக உதிர்ந்ததென்று!

நினைத்துப் பார்க்கிறேன்
இது நட்பின் அடையாளமா ?
இல்லை
இரண்டு இதயங்களின் சங்கமிப்பா ?

o

இந்த பூக்களோடு கொஞ்சகாலம்

அன்பு மாணவ, மாணவிகளே!
உங்களை வாழ்த்துவதற்கு வார்த்தைகளைச் 
சேமித்துக்கொண்டு வந்தவன் நான்...

ஏனோ புரியவில்லை 
உங்களைப் பார்த்தவுடன் 
என் கவிதைப் பாத்திரம் முழுவதும்
கண்ணீர்ப் பூக்களால் நிரம்பிவிட்டன .

சோகம் என்னைச் சுற்றி 
வேலி போட்டு விட்டது .

'சிரிப்பூ' இன்று காலை 
என்னிடத்தில் தாமதமாகவே பூத்தது .

ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும்
கடல் அலைகளைப்போல் உங்களின் 
சலசலக்கும் பேச்சு என் காதுகளுக்கு 
இனித் தினமும் கேட்குமா?

துள்ளி விளையாடும் மான்களைப்போல்
உங்கள் குறும்புத்தனத்தை இனிப்பார்க்க முடியுமா ?

இந்தச் சூரிய பூக்களும் நிலவுப் பூக்களும் 
என் வானத்தில் இனி வலம் வருமா ?

இந்தப் பிரிவு என் மனதுக்குள் 
தீயை வளர்த்தாலும் அதில் தேன் வடிகிறது !

இந்தப் பிரிவு மின்னலாய் மறைந்தாலும் 
மனசுக்குள் வானவில்லாய் நீள்கிறது .

இன்று கசப்பாய் இருந்தாலும் 
தொண்டைக்குள்  கற்கண்டாய் இனிக்கிறது .

இந்தத் தித்திப்புச் சுவையோடு வாழ்த்துகிறேன் 
என்னெவென்று தெரியுமா?

மாணவப் பருவம் மனித வளர்ச்சியின் 
இரண்டாம் பருவம் -இங்கு 
அஸ்திவாரம் ஆசிரியர்களால் கட்டப்படுகிறது .

இது மாடிகளாவதும்  மணல் மேடுகளாவதும் 
மாணவர்களின் திறமையைப் பொறுத்தே 
தீர்மானிக்கப் படுகிறது .

ஆசிரியர்களால் சொல்லப்படும் 
ஒவ்வொரு சொல்லும் 
உங்கள் எதிர்கால வாழ்விற்கு 
ஏறிச்செல்லும் ஏணிப்படிகள் !

பயன்படுத்திக் கொள்கிறவர்கள்
வாக்குறுதியைப் போல்
தேய்ந்து போனது .

நமக்குக் கிடைத்த சுதந்திரம் மட்டும் என்ன
சும்மா சொல்லிக் கொள்ள மட்டுமே !

நம் நாட்டில் மக்கள் சிரிப்பதென்பது
தேர்தல் வரும்போது மட்டுமே !

விஷம் போல் ஏறுவது விலைவாசி மட்டுமே !
இங்கு படிப்பு மட்டும் என்ன ?
பழைய பேப்பர் வாங்கும்
கடையைப் போல் ஆனது !

ஆனால் ,சிந்தனை என்பது
மனிதனுக்குச் சிவப்பு ரத்தம் போன்றது !

இனி ,திரு.வி .க .வீதியில்
சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வதும்
காந்திசிலை அருகில்
காற்று வாங்க நிற்பதும்
பான்பராக் கடையில்
கியூ வரிசையில் நிற்பதும்
நடிகர்களின் படத்திற்கு
முட்டிமோதி ரத்தம் சிந்தி நுழைவதும்
அவர்களுக்கு ரசிகர்மன்றம் திறப்பதும்

நம் சிந்தனையைச் சிதறடிக்கும்
போதை போன்றது !

நீங்களோ ...
புதிய சரித்திரம் படைக்கப்போகும்
யுக புருஷர்கள் !

உங்கள் பருவத்தில் பூக்கும்
ஒவ்வொரு பூக்களும் போர்களப் பூக்கள் !

இந்தப் பூக்கள் போருக்குப் புறப்பட்டால்
பூமியைப் புரட்டி எடுக்கும் !
ஆகாயத்தைக் கொண்டு வந்து
அருகில் நிறுத்தும் !

இருண்டு கிடக்கும் இந்தச் சமுதாயத்தை
ஒளி மயமாக்க வந்த பாரதிதாசனின்
பரம்பரைப் பூக்கள் நீங்கள்  !

முடங்கிக் கிடக்கும் இந்தச் சமுதாயத்தை
நடக்க வைக்கப் போகும் வல்லமைப் பூக்கள் !

எந்த பளபளப்புக்கும் எந்தச் சலசலப்புக்கும்
மண்டயிடாத மாவீரர்கள் நீங்கள் !

எனவே  இலட்சியம் என்பது 
உங்களுக்கு உயிராய் வளரட்டும்!

புதிய சிந்தனை என்பது மனித வளத்தை
மதிப்பதாக அமையட்டும் !
வசந்தம் உங்கள் கதவைத் தட்டட்டும் !
   
O

Tuesday, 1 November 2011

கனவுகளும் கற்பனைகளும்



அம்மா கர்ப்பத்தில் சுமந்தவள் .
அப்பா கற்பூரமாய் எரிந்தவர்.

இருக்க இடம் உண்ண உணவு  உடுக்க உடை 
இம்மூன்றுக்கும் ஆதாரம் அப்பா !

கனவுகளையும் கற்பனைகளையும்
நிஜமாக்கித் தந்தவர் .
குடும்பம் என்ற சொல்லுக்கே 
இலக்கணமாய்த் திகழ்ந்தவர் .

மனைவியையும்  மக்களையும் 
இரு கண்களாகப் போற்றியவர் .
குடும்ப பாரம் சுமந்தே 
அப்பாவின் தலை வழுக்கை ஆனது !

பிள்ளைகள் பிற்காலத்தில் உதவும் என்று 
மாடாய் உழைத்து ஓடாய்ப் போனவர் .

சம்பாதிக்கும் வரையில் மரியாதை 
இல்லாதபோது அவருக்கோ அவமரியாதை.

நேற்றைய நிகழ்ச்சிக்கெல்லாம் இவரே முதல்வர் .
இன்றோ முடங்கியதால் ஓரம் கட்டிய முடவர் .

பிள்ளைகள் தாங்கும் என்று 
ஓடி வந்த போது...
ஊன்று கோலே தாங்கியது .

எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் 
முதியோர் இல்லத்தில்தான் அப்பா !

அம்மாவும் அப்பாவும் பிள்ளைகளைப் 
பன்னீரால் நனைத்தனர் .
பிள்ளைகளோ இருவரையும் 
கண்ணீரில் கரைத்தனர் !

o                           

Monday, 31 October 2011

கண் சிமிட்டி அழைத்ததேனடி ?




அன்று அவசரமாய்க்
                கடிதமொன்று கொடுத்ததேனடி ?
இன்று பிரிவு நம்மைப் 
                பார்த்துச் சுடுவதேனடி ?

என் பெயரைச் சுருக்கி எழுதி 
               அழைத்து மகிழ்ந்ததேனடி?
என் நெஞ்சில் சுருக்குக் கயிறைப்
               போட்டு மாட்டியதேனடி ?

கதவருகில் நின்று
               கண் சிமிட்டி அழைத்ததேனடி?
காதல் கதைசொல்லிக்
               கையில் விலங்கு போட்டதேனடி ?

உனக்கு என்னடி
               ஒன்றுமில்லை உனக்கடி
எனக்கடி விழுந்ததடி
                உன் சொல்லடி

உன் பார்வை தந்த வெளிச்சம்
               என் கண்ணில் இல்லையடி மிச்சம்
உன் உறவு மாறிப் போனதால்
               என் உயிரும் பிரிந்து போகுமோ ?

பொட்டு வைப்பதும்
               பூச்சூடி விடுவதும்
என்றும் நீயே எனக்கென
               கையில் அடித்துச் சொன்னதேனடி ?

வானும் மண்ணும் போல
               வாழ்வும் வளமும்
உன்னோடென்று உயிரின் மீது
                உறுதியிட்டுச் சொன்னதேனடி ?

என் கண்களுக்குள்
               கண்ணீர் வற்றிப் போனதேனடி ?
நம் காதல் இன்று
               கானல் நீராய் மாறிப் போனதேனடி ?

காரணம் என்னவென்று
               உன்னில் உன்னைக் கேட்டுப் பாரடி ?
என் இதயம் என்றும்
               உனக்கே திறந்து கிடக்குமேயடி

உனக்கு விருப்பமில்லை என்றால்
               என் இறப்பிலாவது கலந்துகொள்ளடி
உன் கையில் நெருப்பை அள்ளி
               என் உடலை எரித்துவிட்டுப் போவாயடி !

o   

Wednesday, 26 October 2011

என்னே தேசப்பற்று !




பிழைக்கப் போனவர்கள்
பிணமாய் வந்தார்கள் !

காலையிலிருந்து மாலைவரை
சூரிய அடுப்பில்
சுருங்கிப் போனவர்கள்
கள்ளச் சாராயத்தால் 
எரிந்து போனார்கள் .

உடம்பு வலிக்காக 
மருந்தாய் குடித்தது 
இவர்களின் உயிரையே குடித்தது .

தூக்கத்திர்காகக் குடித்தவர்கள்
தூங்கிப் போனார்கள்  நிரந்தரமாக .

யார்யாரோ வீட்டு அடுப்புப் புகைய 
இந்த ஏழைகளின் வீட்டின் 
அடுப்பையா அணைக்க வேண்டும் ?

மக்களுக்குக் காவலாய் இருப்பேன் 
என உறுதி எடுத்தவர்கள் 
மக்களைக் காவு கொடுக்கவா 
காச்சுபவர்களுக்குக் காவலாய் இருப்பது ?

கணவன் வருகைக்காக 
பொட்டோடும் பூவோடும் நிற்பவர்கள் 
கையில் பிண மாலையோடு 
அல்லவா நின்றார்கள் !

திண்பண்டத்தை எதிர்பார்த்து
நிற்கும் குழந்தைகள் 
அன்று அப்பாவிற்காக  
தீப்பந்தத்தோடு அல்லவா நின்றார்கள் !

இந்த ஏழைகளின்
கனவுத் தோட்டங்கள்
கல்லறைகளாய் மாறிப் போனதே !

சின்ன எழுத்தில்
இது விஷம் என்று விளம்பரம் .
படிக்காத பாமரனுக்கு எப்படி புரியும் ?

தண்ணீர் விடமாட்டேன் என்றவர்கள்
உயிர் பறிக்க
கேட்காமலே திறந்து விட்டார்கள்
கள்ளச் சாராயத்தை...

என்னே தேசப்பற்று !

o

Wednesday, 19 October 2011

மெளன விசிறி




அன்றாடந்தான்
உன் வீடு நோக்கி வருவேன் 
எப்பொழுதும்  போல் உன் 
அன்புப் பரிமாறல்கள் அமைந்திருக்கும்.

ஆனால் ,பத்துப் பதினைந்து நாள்களாய்
உன் பாசம் ஏனோ பாசாங்கானது 
என்னிடத்தில் என்றும் சலசலக்கும் 
நீரோடைப் போல் கலகலக்கும் உன் பேச்சு
அன்று மட்டும் அரைகுறை வார்த்தைகளாய் ...

நீ  நடத்திய  ஊமை நாடகம் 
உன் சொந்தங்கள் அனைத்தும் 
என்னை விட்டு அறுந்து போனதோ   
என்று எனக்குள் பிரமிப்பானது !               

ஏனென்றால் என் மனச்சுமையை
வேறு யாரிடமும் இறக்கிவைக்க
என் இதயம் சம்மதிப்பதில்லை.

உன் ஆலயத்தை வழிபடாமல்
என் கால்கள் நகர்ந்ததில்லை .

என் உண்மையின் ரகசியம்
எப்போதும் உன்னிடத்தில் மட்டுமே
முதலில் முத்துக் குளிக்கும் .

அன்று மட்டும் ஏன் நமக்குள் முரண்பாடுகள் ?

எனது வருகை உனக்குச் சுமையாக
இருந்தால் சூரியக் கதிர் கொண்டு
சுட்டெரித்து இருக்கலாம் !

நானும் சுகமாகப் பொசுங்கியிருப்பேன்.
அதை  விடுத்து நீ ஏன்
மெளன விசிறி  கொண்டு
எனக்காகக் கையசைக்க வேண்டும்
விருப்பமில்லாமல் ....

o                   

தூறல்



என்
 ஈரமான விழிகளில் -நீயோ
ஓரமாய் ஓய்வெடுத்தாய்
ஓய்வெடுத்த என் நினைவில் -என்னைப்
பாய் விரித்துப் படுக்கவைத்தாய்
படுக்கவைத்த பைங்கிளியே -உன்
சிரிப்பெங்கே தொலைத்து விட்டாய் 
தொலைத்து விட்ட  தொடுவானமே-உன்  
தூறல் பட்டுத் துடித்தெழுந்தேன் 
துடித்தெழுந்து  பார்க்கையிலே -உன் 
மடிமீது தவம் கிடந்தேன் !

தவம் கிடந்த ஞானத்திலே-எனக்குள்
தவழ்ந்து வந்து முத்தமிட்டாய்
முத்தம் பட்ட மோகத்திலே -உனக்குள்
சத்தமின்றி முத்தெடுத்தேன்
முத்தெடுத்துப்  பார்க்கையிலே -என்  
முகச் சாயல் தெரிந்ததடி 
தெரிந்து கொண்ட என் கண்மணியே -நீ  
புரிந்து கொண்ட என்  மனைவியடி!

o         



   

Monday, 17 October 2011

பாட்டன் வெட்டிய கிணறு



வேப்ப மரத்தின் நிழலும்
ஏரிக்காற்றின் வாசமும்
அனுபவித்த நான் ....இன்று
கழிவுகளின் துர்நாற்றத்தாலும் ...

துரத்தித் துரத்தி இரத்தம் குடிக்கும்
கொசுக்களின் படையெடுப்பாலும்
என் இரவுகள் அழிக்கப் படுகின்றன !

வசிக்கும் வீட்டில்
திருடன் வந்து போனால்கூட -நாளையச்
செய்தித் தாள்களிலும்  தொலைக் காட்சிகளிலும்
பார்த்துதான் தெரிந்துகொள்வார்கள் ...
பக்கத்துக்கு வீட்டுக்காரர்களும் ...
வீட்டின் உரிமையாளர்களும் !
  
விடியற்காலையில் ...என் தூக்கத்தைக் கலைக்கும்
தெருக்கோடியின் கூரையின்மேல்
கூவி அழைக்கும் சேவலும்
என் வீட்டு முருங்கை மரத்தின்மேல்
காகங்களும் குருவிகளும் சண்டையிட்டுக் கொள்ளும்
சத்தம்கேட்டு படுக்கையில் எழுவேன் ...

இங்கு படுக்கும்போதும் விழிக்கும்போதும்
ஆம்புலன்ஸ் சத்தமும்... அடுத்தவர்களின் 
செவிப்பறைகளை செலவில்லாமல் 
செவிடாக்கும் ஒலிபெருக்கிகளும் ...

விண்ணை அதிரவைக்கும் வெடிச்சத்தமும்
கேட்டுக் கேட்டு விடிவதுதெரியாமல் 
ஒவ்வொரு நாளும் வேலைக்கு 
ஓட்டப் பந்தையமாய் ...!

கிராமத்தில் இருந்தபோது
ஒவ்வொரு பொருள்களுக்கும்
வெவ்வேறு திசைகளில்...
அலைந்து திரிந்ததால் ...
உண்ட உணவு செறிமானமானது.

நகரத்தில் எல்லாமும் வீட்டுக்கருகே கிடைப்பதனால்
உண்ட உணவு செறிமானமாக
மருத்துவரிடம் ஆலோசனை அவ்வப்போது...!

கிராமத்தில் வாழ்க்கையே
ஓட்டமாய் ...இருந்தது.
நகரத்தில் நலமுடன் வாழவே
நடைப் பயிற்சி கட்டாயமானது !

பிள்ளைகளின் படிப்பிற்கும்
நகரத்தின் நாகரீகத்திற்கும்
நக(ர)த்திற்கு குடி வந்தவர்கள்
உறவுகளை தொலைத்து விட்டார்கள் .
உடைமைகளை இழந்து விட்டார்கள் .

எதிர்காலப்  பிள்ளைகளை நம்பி
எத்தனையோ பெற்றோர்கள்
நிராயுதபாணிகளாய் .... 

நினைவுகள் வரும்போது ...
கிராமத்திற்குச் சென்றால்
அப்பா அம்மா விட்டுச் சென்றவைகள்
கண்முன்னே ஒவ்வொன்றாய் ...
கதைச் சொல்ல வந்து நிற்கும்!

கொள்ளைபுரம் சென்றால் ...
சின்னவயதில் அப்பாவுடன்
மோழியைப் பிடித்துக்கொண்டு
மண்கட்டியில் தட்டுத் தடுமாறி
ஏர் ஓட்ட கற்றுக்கொண்ட
காட்சி ஒருபுறம் ....

அப்பா வரப்பில் அண்டைபோடும்போது
அத்தனை கூலியாட்களையும்
அசரவைக்கும் அழகு ஒருபுறம் ...

அப்பா ஏர் ஓட்ட ...
அம்மா, ஏர் போன வழியில்
மல்லாட்டப்பயிறை மடியில்
கட்டிக்கொண்டு விரல் இடுக்கில்
போட்ட அழகு ஒருபுறம் ....

இரவு களத்துமேட்டில் நெல்லுப்பட்டரையில்
அப்பாவுடன் குளிருக்குச் சம்பை
தலைப் பகுதியில் கவுத்தும் ,
சாக்குப் பையில் காலையும்
நுழைத்துக்கொண்டு திக்குத் ...திக்கென்று
ஏரியின் அருகில் தூங்கியும் தூங்கமலும்
காவலுக்குக் காத்துக் கிடந்தது ஒருபுறம் ...

ஓர் இரவில்  பெய்த பேய்மழையால் ...
பாட்டன் வெட்டிய கிணறு  குட்டையானது .
பங்காளிகளுக்குள் கேள்விக் குறியானது? 

அப்பாவின் அயராத முயற்சியால் 
மறுபடியும் புதிய கிணறானது .

இன்று பங்காளிகளுக்குள் ஒற்றுமையின்மையால்
அப்பா கட்டிய கிணறு 
எனக்குப் பயன்படாமலே போனது !

o
              

Saturday, 8 October 2011

இறப்பும் அழகு !



சொல்லிக்கொண்டு வருவதில்லைக் காதல் 
திருடனாய் வந்து அள்ளிக் கொண்டு 
போவதென்பதே காதல் 

மவுன மொழியில் பேசிக்கொள்ளும் காதல் 
ஊமைப் போல அங்குமிங்கும் 
திருதிருவென்று முழிக்கும் அந்தக் காதல் 

விழிகள் இரண்டும் மோதிக்கொள்ளும் காதல் 
பாவை முகம் பார்த்துப் பார்த்து 
ரசிக்கும் அந்தக் காதல் 

புவியைப் போல் சுற்றிச் சுற்றி  வரும் காதல் 
பாவை முகம் பார்த்துப் பார்த்து 
ரசிக்கும் அந்தக் காதல்

தன்னைச் சுற்றி  நந்தவனமாய் 
மாற்றிக் கொள்ளும் அந்தக் காதல் 
சிரித்து சிரித்துப் பூத்துக் குலுங்கும் 
சிங்காரக் காதல்

ஒரசிப் பார்க்க துடிக்கும் அந்தக் காதல்
ஒரசிவிட்டால் உடலுக்குள்ளே
வெப்பச் சலனம் பாயும் அந்தக் காதல் 

சாதி மத  பேதங்களை சாகடிக்கும் காதல் 
சாதித் தீக்குள் தள்ளிவிட்டால் 
எதிர்த்து நிற்கும் அந்தக் காதல் 

உண்ணும் போதும் உறங்கும் போதும் 
உயிருக்குள்ளே புதைந்து கிடப்பது காதல் 

காதலின் விருந்து இளமையின் அழகு
காதலில் விழுந்தால் உலகமே அழகு

அவள் நடையும் அழகு
அவள் உடையும் அழகு
அவளை முதன்முதலில்
பார்த்ததும் அழகு -- மொத்தத்தில் 
அவள் படைப்பும் அழகு 

காதலில் தோல்வியும் அழகு - அது
சிந்தும் கண்ணீரும் அழகு  
காதலின் நினைவுகள் அழகு - அது 
பேசும் மொழியும் அழகு 

உயிரே அழகு  அவளே அழகு 
பிறப்பும் அழகு  இறப்பும் அழகு 

   

Friday, 7 October 2011

இருட்டுக்குள் என் கிராமம்



என் கிராமத்து மக்கள் ...
இன்னும் இருட்டில் இருந்தே  
யாகம் நடத்துகிறார்கள் .

மூட நம்பிக்கையையே  
முரண்டு பிடிக்கிறார்கள் .
மூச்சு விடுவதற்குக்கூடப்
பழைய  பஞ்சாங்கத்தைப்
புரட்டி முத்தமிடுகிறார்கள் .

அன்றாடம் வயிற்றுப் பசிக்குப்
பண்ணையார் வீட்டில்  
கைகட்டி நிற்கிறார்கள்
கூலி வேலைக்கும்  
ஒரு கைக் கூழுக்கும் !

உப்புக்கும் மிளகாய்க்கும்
ஒவ்வொரு வீடாய்த் தாவும்
ஆத்தாக்கள் ஒருபுறம் ...

அரை வயிற்றையாவது
நிரப்பிக் கொள்ள அடுத்த வீட்டை 
எட்டிப் பார்த்து ஏங்கும்  
குழைந்தை குட்டிகள்  ஒருபுறம்

இவர்களுக்குச்  சொந்தமாக
இருக்கும் நிலமோ "தரிசு"

வானம் பார்த்தால்தான் இவர்களின்
வயிறு தன்னிறைவு  அடையும் 
அதுவரை  வறட்சிதான்.

இதனாலேயே   இவர்களின் "இரைப்பை "
சுருங்கி விடுகிறது  இறப்பதற்குள்.

ஊரின் பெயரோ  "பூத்தவனம்"
ஊரைச் சுற்றிலும் அலங்கரிப்பதோ அலரி, சப்பாத்தி,
வேலி  கத்தான்கள்!

தாகத்திற்காக  எப்போதும்  
வாய்திறந்து   கொண்டிருக்கும்
வயல்வெளி   வெடிப்புகள்.

இங்கோ  ஆர்ட்டீசியன்    ஊற்று
கிடைக்கும் என்று ஆழ்கிணறு  தோண்டினால் 
அகப்படுவதோ  இமையமலைக் குன்றுகள்.

இவர்கள் அணிந்து கொள்ளும்
ஆடைகளோ ஒட்டுப் போட்டவை.
அதுவும் அடிக்கடி
அப்பன் முதல் பிள்ளைவரை
இடமாற்றம் அடையும் !

மழைக் காலங்களிலோ
குழைந்தைகள் கோணிப் பைக்குள் குளிரடுக்கும் !

இங்குள்ள சிறுவர்களின் கல்வியோ
காகித ஓடங்கள்!
ஆடுகளும் மாடுகளுமே
இவர்களின் ஆரூயிர் நண்பர்கள் .

என் கிராமத்து மக்கள் ஒவ்வொருநாளும்
உழைப்பின்  வியர்வையிலேயே
குளித்து விடுவதால்
என் கிராமத்து மண்ணை எங்கு தோண்டினாலும்
உப்புத் தண்ணீரே  ஊற்றுநீராக வரும் !



       

Thursday, 6 October 2011

நட்பு



நட்பு மனிதர்களுக்குக் கிடைத்த மகத்தான ஆயுதம்!  
நட்பு பறவைகளுக்கும் உண்டு ;விலங்குகளுக்கும் உண்டு  .

நட்பின் பயணம் பேருந்திலும் கிடைக்கும் ; பேனாவிலும் கிடைக்கும்  .
தெரிந்தும் கிடைக்கும் ; தெரியாமலும் கிடைக்கும் .

நட்புக்கு முகம் தேவையில்லை; அறிமுகம் இருந்தாலே போதும் .
ஒரு  ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில்  
ஏற்படுகின்ற நட்பே காதலெனும் தேரை கட்டியிழுக்கிறது !

நட்பு ஒன்றே எதற்கும் கட்டுப்படாது  .
நட்பு ஒன்றே எதையும் காயப்படுத்தாது .

நட்புக்கு நிறம் இல்லை; சாதி இல்லை; மதம் இல்லை  .
நட்புக்கு முறிவு இல்லை ; ஆனால் பிரிவு உண்டு .

நட்பு ஒன்றே மனிதர்களை  
அறிமுகப்படுத்தும் அடையாளச் சின்னம் !

நட்பு இல்லையெனில் உறவுகள் இல்லை  .
உறவுகள் இல்லையெனில் உயிர்கள் இல்லை .

நட்பு  சிலருக்கு  வாழ்க்கையைத்  தருகிறது  .
சிலருக்கு வாழக்   கற்றுக் கொடுக்கிறது .

நட்பு ஒற்றுமையை வளர்க்கும்;  உயிரைக் காக்கும் .

நட்பே  உலக நாடுகளை ஒன்றினைக்கும் ... 
செயற்கைக் கோளாகும் !

மனிதர்களே ! நட்பு  செய்யுங்கள்  ....
மனிதப்   பிறவியின்  மகத்துவம் புரியும்  !  

மண்ணின் மடியில் மரம் வளர்ப்போம்...
மழை பொழியும் .....
   
மனித மனங்களில் நட்பை விதைப்போம்  .....
உலகம்  அமைதிபெறும்......!


o     

    






Wednesday, 5 October 2011

மரங்களோடு அல்ல !

தலைப்பாகையோடும்  கோமணத்தோடும்
அவசர அவசரமாய்க் கையில்  
கொடுவாள் ஏந்தி       
எங்கே புறப்படுகிறாய்  மனிதா !  
யாரைப் பழி தீர்க்க இந்தக் கோலம் ?  

உன்  வயிற்றுப் பசிக்கு  உணவளித்து
உன்  உயிரைக்  காப்பாற்ற   
வானத்தை நோக்கித்  தவமிருக்கும்  
அந்த வானுயர்ந்த மரங்களையா    
வெட்டப்  போகிறாய் !

உன் உரிமைத் தாகத்திற்கு -அதன்  
உயிரையா  குடிக்க வேண்டும் ?

தலைமுறை தலைமுறையாய்  
நம்மோடு உறவுகொண்டு வரும்
உயிர்ச் சொந்தங்கள் அல்லவா அவைகள் !

அவற்றை விதவையாக்கினால்  
வான்மேகம் அல்லவா  
தன் கண்களை இறுக்கிச் சாத்திக் கொள்ளும் !

உன் கையில்  ஏன் 
மண்ணைண்ணையோடு  தீப்பெட்டி ?
யாரைத்   தீக்குளிக்கக்    
கட்டாயப்   படுத்தப் போகிறாய் ?

மனிதர்கள்   தீட்ட முடியாத  
அந்தப் பசுமை நிறைந்த ....
வானுயர் வண்ண ஓவியங்களையா....?  

அவைகள்  உனக்கு  
அமுதசுரபியாய்  அவ்வப்போது   
வாரி  வழங்குகின்றனவே!

தவறு  செய்யாத அதனைத்   
தண்டிக்கப் போவது  நியாயமா ?

வெட்டுபவனும்   நீதான்   
வளர்ப்பவனும்   நீதானே!
உன்னைவிட உரிமை   கொண்டாடுவதற்கு  
இந்த மண்ணில் வேறு  எவருக்கு உரிமை உண்டு ?

மனிதா !  நீ  போரிடு 
மரங்களோடு அல்ல !
உன்னை அடக்கி  ஆளும்  மனிதர்களோடு!    

o



             TT

Tuesday, 4 October 2011

நட்புச் சாகக்கூடாது !

ஆறாம் வகுப்பில்தான்
அவனும் நானும் முதல் சந்திப்பு  . 
இடைவேளையில் இணைந்தது கொள்வோம்!

ஐஸ்,கமர்கட்டு ஒருவரைவிட்டு  ஒருவர்  
சாப்பிடுவதில்லை !

மாணவர்களுக்குள் பொறாமை  
எங்களைப் பார்க்கும்போது.

வீட்டில் கோபத்தோடு வந்துவிடுவேன்  
அப்பா மதிய உணவை மறக்காமல் 
கொண்டு வந்து கொடுப்பார் .

இன்றும் சகமாணவர்களைச் சந்திக்க நேர்ந்தால் 
அப்பாவை  நினைவுட்டி நெகிழ்ந்து போவார்கள்

மதியம் சாப்பாடு டப்பாவைத் திறக்கும்போது  
நண்பன் காணாமல் போவான் !

கண்டுபிடித்து இழுத்து வந்து 
உண்டு மகிழ்வோம் .

எவனாவது அடித்துவிட்டால்
எட்டி உதைப்பான்...கோவம் மூக்கின்மேல்!

டியூஷனில் கொடுக்கும் நோட்சை
மறவாமல் நண்பனுக்குக் கொடுத்துப்
படிக்கச் சொல்வேன் !

ஆசை, அவனும் பாசாக வேண்டுமே  !
பத்தாம் வகுப்பிற்குப் பின் பிரிந்து போனோம் !
பல வருடங்கள் கடிதங்கள் மட்டுமே!
நட்பை வளர்த்து வந்தது...

பட்டப் படிப்போடு வேலை கிடைக்காமல் நான் !
பத்தாம் வகுப்பில் தோல்வியோடு போனவன்
பத்துப் பேருக்கு முதலாளியாக அவன் !

என் இருண்ட வாழ்க்கைப் பயணம்
அவனால் வெளிச்சமானது!

நம்பிக்கை எனக்குள் அழுத்தமானது.   
எனக்கும் கடமை உண்டு
என்  நட்புச் சாகக்கூடாது !

O

Saturday, 1 October 2011

கையில் ஒரு சிம்னி விளக்கோடு...!

அமைதியாய் இருந்த
என் குளத்தில் முதன்முதலாய்
கல்லெறிந்தவன்  நீ!  

சூரியனை நோக்கி                      
பூமிசுற்றி வருவதைப் போல்
உன் பார்வைகள்
என் மீதுச்  சுற்றின!

சுதந்திரப் பறவையாய்
இருந்த என்னை   
ஒரு ஆயுள் கைதியாய்
சிறைப்பட்டேன் உன்னிடத்தில் !   

இராணுவ ரகசியமாய்  
நம் காதல் இருக்கட்டும்  என்றாய் ! 

நானும்...   
நம்பிக்கையோடு புதைத்து வைத்திருந்தேன்    
ஒரு புதையலாய்...

தொலைத் தொடர்பு துறைக்கு மட்டுமே    
நம் அந்தரங்கப் பேச்சின்  நேரடிச் சாட்சியம்!  

திரை மறைவில் பேசிக்கொள்வது 
அன்பின் அழுத்தம் 
அதிகமாகவே வெளிப்படும் .      

என் பெற்றோர்களுக்கு
மாப்பிள்ளை பார்க்கும் படலம்
குறைத்துவிட்டதாக நினைத்து
வந்த வரன்களை   எல்லாம்
ஒதுக்கித் தள்ளினேன் !

வாழ்ந்து கொண்டிருப்பது
உன்னுடன்  அல்லவா!

காலங்கள் ...
சொல்லிக்கொள்ளாமல் நகர்ந்தன.
என் வயதும்
எனக்குத் தெரியாமலே கூடின .   

என் ஆசைகளையெல்லாம்
உன்னால் அழித்துக்கொண்டேன்.
இல்லை
மாற்றிக் கொண்டேன்.

ஒரே இடத்தில்
இருவரும் பணிபுரிந்ததால்

நான் பிறரிடம் பேசுவதிலும் சிரிப்பதிலும்
சிக்கனமாய் இருந்தாலும்
என் மேல் அடிக்கடி
ஒழங்கு நடவடிக்கை இருக்கும் !

அனைத்திற்கும் விளக்கமளித்தால்தான்
அடுத்தகணம் என்னிடம் பேசுவாய் !

உனக்கோ பதவி உயர்வு வந்தது .
மகிழ்ச்சி வெள்ளத்தில் நான் ...

ஏன் தெரியுமா ?
என் தேவாலயத்தை
அலங்கரிக்க வரும்
தேவன் அல்லவா நீ !

அழைப்பு விடுத்தேன்...
இனியும் என்னால் பொறுமை காக்க
முடியாதேன்றேன்.

நீயும் வருவதாகச் சொன்னாய்
உறவினர்களோடு...

உனக்குப்  பிடித்ததெல்லாம்
செய்து வைத்து காத்திருந்தேன் ...!

நீயும் வந்தாய்
உன் பெற்றோர்களும் உறவினர்களும்
வந்தார்கள் ... பார்த்தார்கள்...
உணவை ருசித்தார்கள்...!

அன்றுதான் நமக்குள்ளே
இருந்த காதல்
ஊருக்குள் அரங்கேறியது...!

ஆச்சசிரியத்தொடு மகிழ்ச்சி
ஊரில் உள்ள மனிதர்கள்
பெருமூச்சி விட்டார்கள்...

இத்தனை  காலங்கள்
எத்தனை  வரன்களை
தள்ளி  வைத்தாள் பாவிமகள் !

காத்துக்கொண்டிருந்தேன்
கல்யாணத் தேதிக்காக ...
பதில் வந்தது 'நீ கறுப்பு' என்று!

என்  அன்பிற்குரியவனே!
நீ என்ன சொல்கிறாய் என்றேன் ?
நானும் அதைத்தான்
வழி மொழிகிறேன் என்றாய் !  

அதிர்ந்து போனேன்...!
உடைந்து போனேன்...! 

இனி அழுவதற்கு  என்  கண்களில்
ஒரு சொட்டுக் கண்ணீர்கூட இல்லை! 

உன்னிடம் தொலைத்து விட்ட
அந்த வாழ்க்கையை ...
இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன் ...

கையில் ஒரு சிம்னி விளக்கோடு...!
                                     

Friday, 30 September 2011

வீதியெங்கும் பைத்தியங்கள்




எதை மறந்தாலும் இதை மறப்பதில்லை      
எதைத்  தொலைத்தாலும்  இதை தொலைப்பதில்லை      
அப்படியே தொலைத்தாலும்   ...  
அடுத்தநாளே என் கையில் அலங்கரிக்கும் !   

அவ்வப்போது புதியதாய் பார்க்கும்போது -எனக்கு                    
புதுப்பெண்  அனுபவம்தான் !

நடக்கும்  போதும்  படுக்கும்  போதும்            
பாத்ரூம்    செல்லும் போதும்-  ஒரு       
புலனாய்வுத்  துறையினரைப்  போல்  என்னோடு  வரும்  . 

அழைப்பது  ஆணாக இருந்தால்             
 ' ஹகூவை'- போல்  என் பேச்சிருக்கும்...      

அழைப்பது பெண்ணாக இருந்தால்     
மரபுக்  கவிதையாய்  நீட்சியடையும் ...

பொய் சொல்லத்  தெரியாமல்  இருந்தேன்    
இது வந்ததிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு பொய் ....

இது கையில்  இருந்தாலும் பையில் இருந்தாலும்             
கழுத்தில்  தொங்கினாலும் இடுப்பில் இருந்தாலும்    
இதனால் வரும்' அகால மரணத்தை' யாரால் தடுக்கமுடியும்?  

 வீட்டுக்குள்  இருந்த பைத்தியங்கள் போய்.. .    
இப்போது  _
வீதியெங்கும்   பைத்தியங்கள்!    

மருத்துவ ஆராச்சியில்      --
காது செவிடாகும் ,  புற்று நோய் வரும் ,     
நுரைஈரல் பலவினமாகும் ஆயுள் குறையும் ...      
என்றார்கள் ... அது எந்தநோயோ   ..    

எதோ ஒரு   நோய்க்கு ...  
நானும் தயாராகிவிட்டேன் ...! 

o


Thursday, 29 September 2011

அதிசய மரம்


ஆற்றங்கரையிலும்
வாய்க்கால் வரப்பின் ஓரத்திலும்

வானுயர நின்றபடி  
விவசாயின் நிலங்களைக்

காலம் காலமாய்க்  
காவல் காத்து வரும்  
காவல்காரன் நான்!  

வெய்யில் காய்ந்தாலும்     
மழை பொழிந்தாலும்    
புயல் அடித்தாலும்   
ஒற்றைக்காலோடு       
தவமிருப்பவன் நான்!

என் அடையாளாச் சின்னம்  
கறுப்புதான்!   
ஏனென்றால் என்னோடு இருக்கும்       
விவசாயின் நிறமும் அதுதானே!
நான் இல்லாத கிராமங்கள் இல்லை     
கிராமங்கள் இல்லாமல் நானுமில்லை!
என்னைக் குழந்தைகள் முதல்    
பெரியவர்கள் வரை
விரும்பாதவர்கள் யாருமில்லை!

கார்த்திகை மாதமும்   
சித்திரை மாதமும் வந்து விட்டால்  
என் கிராமத்துக் குழந்தைகளுக்குக்      
கொண்டாட்டம் தான் !

என்னால் அழிந்தவர்கள் யாருமில்லை
என்னை அழிப்பவர்கள் தான் ஏராளம் !

நான்  'கறுப்புத் தங்கம்' !  எப்படி?
காய்ந்தால் சருகு  
நனைந்தால் குடை  
போதைக்குக் கள்ளு
கோடைக்கு நுங்கு
தாகத்திற்குப் பதநீர்  
ஏழைக்கு விசிறி
அடுப்புக்கு விறகு  
வீடுகட்ட கயிறு 
வெய்யிலுக்கு நிழல்
வெட்டிய  பின்  வீட்டிற்கு  வாரை
விளையாட்டுக்குப்  பொம்மை  
இன்னும்    வெவ்வேறு  வடிவில் 
அவ்வப்போது  பயன்படுவேன் !
என்னில்  எதுதான்   
எம் மக்களுக்குப்  பயனில்லை!
நான்தான் மரம்   
இல்லை   
அதிசய மரம்! 
'பனைமரம்'  நான்தான்! 
அடுத்துவரும் தலைமுறைக்கு      
அடையாளச் சின்னமும்   
நான்தான்...  நான்தான் ...!   

O

இழப்பு


கரைந்து போன வாழ்க்கையைக்   
கண்ணீரால் நிரப்பிக் கொண்டிருந்தார்.  

இருபத்தி ஐந்து   ஆண்டுகளாய்  
அப்பாவின் நரம்புகள் விறகாய் எரிந்தன !

சருகு கிடைத்தாலும்   
குருவிபோல் கொண்டு சேர்ப்பார்.

நடந்து நடந்தே பாதங்கள்   
பாதியாய்க் குறைந்தன.

நட்பின் பெயரில்  
கொஞ்சம் கொஞ்சமாய்க்  
கொள்ளை போயின வாழ்க்கை.

எங்கே கைப்பந்தாட்டத்திற்குப்  
பயன்   படுத்தினால்  உயரப் போய்  விடுவாரோ   
என்றெண்ணிக் கால் பந்தாட்டதிற்கே   
பயன்படுத்திக் கொண்டார் நண்பர்.
உண்மையான நட்பு  
இருவரையும் உயர்த்திப் பார்த்து மகிழும் .
ஆனால் இங்கு உயர்ந்து போனது  
அப்பாவின் நண்பர் மட்டுமே.

நண்பருக்கு நாளெல்லாம் உழைப்பதே
இறைவனுக்குச் செய்வதாய் மகிழ்ந்து போவார்.

அதனால்தான் அப்பாவின்
வியர்வையில் விளைந்த விளைச்சலை எல்லாம்
நண்பரே அறுவடை செய்துகொண்டார்.

அப்பா கண்ட பலன்  
பாராட்டுப் பத்திரமும், சிறு சிறு அன்பளிப்பும்!
அவைகள் அவ்வப்போது கிடைத்த
பரிசுகள் அல்ல !
அவரை அடிமையாக வைத்துக் கொள்ளக்  
கொடுத்த மயக்க மாத்திரைகள் !

இப்படித்தான் எத்தனையோ
ஏழைகளின் வாழ்க்கை  
திருடப்பட்டுக்  காணமல்  போய்விட்டது !
ஏற்றிவிட்ட ஏணியை  
எட்டி  உதைப்பது   இயல்புதானே ! 

நடை பாதை என்றைக்காவது 
தானே நடந்த துண்டா? 
சவாரி அடிக்கப்பட்ட குதிரை
என்றைக்காவது விலைபோன துண்டா?

அப்படி தான் அப்பாவின் கூடு  
வெறுங்கூடாய்ப் போனது ?

எப்படியோ அப்பா             
உனக்கு உன் நண்பர்   
தெய்வமாகிப் போனாலும்     
எப்பொழுதும் போல    
எனக்கு  நீ   நல்ல  மனிதராகவே  இருப்பா. ! 

O








Wednesday, 28 September 2011

அம்மா


அம்மா !
நான் பள்ளியிலிருந்து  வீடு திரும்புகையில்   
முடிச்சி வைத்திருந்த  
முந்தனையை அவிழ்ப்பாய்.
என்னவென்று கேட்ப்பேன்.
யாரோ ஒருத்தர் கொடுத்தாங்க  
காலையில என்பாய்.
மகிழ்ச்சியோடு தின்பேன்
அந்தத்   தின்பண்டத்தை!

உன்னை உற்றுப் பார்க்கையில்  
சேறும் சகதியோடு  உன் மேனியெல்லாம்    
காய்ந்த சருகைப்போல் வாசம் வீசும் .

சூரியன் உன்னைச் சுட்டேரித்தே   
உன் முதுகெல்லாம் பளபளக்கும்  
மீன் செதில்களைப்போல் .

உலைக்கையும், களைக்கட்டையும் 
பிடித்துப் பிடித்தே கைகள் இரண்டும்  
உருக்குலைந்து போயிருக்கும்.

ஏரியெல்லாம்  சுற்றித் திரிந்து  
கூடை கூடையாய்ச்
சாணத்தைக்  கொண்டுவந்து  
நிலத்திற்கு  உரமாக்குவாய் .

நெல்பயிரும் நன்றாய் வளரும் .
கூடவே  களையும்,  பூச்சிகளும்   
திருப்பதிபோல் திட்டுதிட்டாய் மொட்டையடிக்கும் !

ஓரிருமுறை தண்ணீர் பாச்சிவிட்டு  
மூன்றில் ஒருபங்கைக் கணக்காய்ப்  
பதரைக்கூட விடாமல்  
பிரித்துக் கொள்வான் பண்ணையார் !

மீதமுள்ள நெல்மூட்டையை  
வாங்கிய கடனுக்கு வட்டியாகக்  கொடுத்துவிட்டு   
இரவு பகல் பாராமல்   
கூழைக் குடித்தே உயிர் வளர்த்தாய் .

அம்மா !
நீ யார் வீட்டிலும்  
பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கமாட்டாய் .
ஏனென்று  கேட்டால் ...
அங்கெல்லாம் சுத்தமிருக்காது என்பாய்  .  

வெற்றிலையும் பாக்கும்  
இருந்துவிட்டால் போதும்  
வயிறு  நிரம்பும் என்பாய் !

அதோடு இல்லாமல்  ...
வீட்டைச்சுற்றிச் சிவப்புச்சாயம்
 அடித்து வைப்பாய்!
 கட்டியிருக்கும் புடவை கந்தலான பிறகும்  
கட்டிக்கிழிப்பாய் .
கிழிந்தபின், கரித்துணியாய்  வந்து  நிற்கும்  !        

அம்மா!
நீ சேர்த்து வைத்து விட்டுப்போன  
ஆள் உயரம் அடுக்கி வைக்கப்பட்ட
 மண்சட்டிப் பானைகள்  
வீட்டிற்குள் படை வீரர்களாய்  
வரிசையாய் நிற்கும் !

மலைக்குன்று போல் நெல்குற்றும் உரலும்  
வண்டிச் சக்கரதைப் போல்   
கேழ்வரகு அறைக்கும் கல் எந்திரமும்  
எண்ணெய் பிழியும் செக்கைப் போல்

மாவு அறைக்கும் உரலும்  
வீட்டின் ஒதுக்குப்புறம்  
உன் நினைவுச்ச் சின்னங்களாய் !

அதுமட்டுமா ?
வீட்டின் மண்தரையைச்  
சாணத்தால் மெழுகி மெழுகிக்  
கண்ணாடிபோல் வைத்திருப்பாய்  !
மழைக்காலம் வந்துவிட்டால்
கண்ணாடிபோல் உள்ள தரை
சொறி சிரங்காய்ச் சிலிர்த்து நிற்கும் !

அம்மா !
நான் எத்தனை முறை  
அழகு தமிழ் பேசினாலும் ,எழுதினாலும் 
"அம்மா " என்று கூப்பிடும்  
சொல்லிற்கு ஈடாகுமா !

உன் பிரிவு  
இன்றும்,என் கண்களைக்   
குளமாக்கி விட்டுச் செல்கிறதே!

O








கடல் அலைகளாய்...

*கவிஞர் ஜா.வினாயகமூர்த்தி அவர்களின்
*வெள்ளை வண்டி*-- கவிதைத்  தொகுப்பிலிருந்து  சில கவிதைகள் ....

இரவு 9 .07 மணித்துளிகள்
 கைபேசி மெல்லச் சிணுங்கியது ...  

எடுத்துப் பார்த்தேன்    
தகவல் உன்னிடமிருந்து   
தாமதிக்கவா முடியும் ?

மனசுக்குள்  மின்சார ஒளிவெள்ளம்
இரவு  பகலானதைப்  போல்  
கையில்  கிடைத்த  ஒரு புதையலாய்
அந்தச்  செய்தியை  
அந்தரங்கமாய்  வாசித்தேன் .

என்  இதயம்  வெடித்துச்  சிதறியதுபோல்
எரிமலைக் குழம்பாய்
அந்த இரவின் மடியில்  நான்

ஓர்  உயிரைக்  காப்பாற்ற  
மருத்துவர்கள்  நோயாளிகளோடு 
நடத்தும் போராட்டத்தைப் போல் 
என் நினைவுகள் பேரதிர்வால்
இடிந்துபோனது .

 "இறந்து விடுவேன் நான்  
இருபத்து மூன்று நாட்களில்.       
மீண்டும் உன் வாழ்வில் நான்
குறுக்கிட மாட்டேன்  ."

இவைதான் 2008 - ஆம்  ஆண்டை
தகர்த்தெறியப்  பதுக்கி வைக்கப்பட்ட  
ஜெலட்டின்  குச்சிகள் !

திட்டமிட்ட  சதி !

"நினைவுடன் 
2009 -க்கான என் முதல் புத்தாண்டு வாழ்த்துகள் "

குறுஞ்செய்தி முற்றுப் பெற்றது.         
இப்போது              
கடல் அலைகளாய் எனக்குள் நீ !

o


Facebook Google Digg Pinterest